ஜீன்ஸ் பேண்ட் போட்டதால் சிறுமி பரிதாபமாகஅடித்து கொன்று பாலத்தில் தொங்கவிட்ட உறவினர்கள், உத்திரபிரதேச மாநிலத்தில் பரிதாபம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஜீன்ஸ் பேண்ட் போட்ட சிறுமி: அடித்து கொன்று பாலத்தில் தொங்கவிட்ட உறவினர்கள்!
ஹைலைட்ஸ்:
சிறுமியின் தாத்தா, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்
பிரேதப்பரிசோதனையில் சிறுமியின் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது
சிறுமியின் சடலம் பாலத்தின் கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் வேலை கிடைத்ததால் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். இதையடுத்து, அக்குடும்பத்தினர் மீண்டும் தங்களது சொந்த கிராமத்துக்கு திரும்பினர்.
அப்போது, அமர்நாத் பஸ்வானின் 17 வயது மகள் கிராமத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த், அவர் மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அச்சிறுமியோ தனக்கு பிடித்த உடையை அணிவதாக கூறி அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அச்சிறுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்னர், சிறுமியின் உடலை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போய், அருகில் உள்ள மேம்பாலத்துக்குக் கீழே வீசி விட்டு சென்றுள்ளனர். மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட சிறுமியின் சடலம் பாலத்தின் கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கசந்த காதல் திருமணம், 6 மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு..! சென்னை சோகம்
அந்தச் சிறுமி பிணமாகக் கிடப்பதை பார்த்த சிலர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைபற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப்பரிசோதனையில் சிறுமியின் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தாத்தா, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தலைமறைவாக இருக்கும் சிறுமியின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதேசமயம், ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது சற்று நம்ப முடியாத விஷயமாக இருப்பதாக தெரிவிக்கும் போலீசார், கொலைக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.