14 ஆயிரம் புது பஸ் வழங்கியும் பாடாவதி பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருத்தம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
14 ஆயிரம் புதுசு வழங்கியும் பாடாவதி பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருத்தம்.
போக்குவரத்து கழகங்களுக்கு, 14 ஆயிரம் புது பஸ்கள் வழங்கியும், பாடாவதி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், 2010ல் நிதி நெருக்கடியில் சிக்கியதோடு, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பழைய பாடாவதி பஸ்களால், தொடர் இழப்பை சந்தித்தன. இதனால், 2011ல், ஆட்சி பொறுப்புக்கு வந்த, அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆண்டுதோறும் புது பஸ்கள் வழங்கப்படும் என அறிவித்து நடைமுறைப்படுத்தினார்
இதன்படி,
2011-12ல், 3,000 பஸ்கள்;
2012-13ல், 2,953
2014-15ல், 1,200
2016-17ல், 2,000
2018-19ல், 3,000
2019-20ல், 2,000 பஸ்கள் என, 14 ஆயிரத்து, 153 பஸ்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர, மலைப்பகுதிக்கும் பஸ்கள், மினி பஸ்கள் என, 10 ஆண்டில், 14 ஆயிரத்து, 661 புது பஸ்கள், அரசின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகள், 7 லட்சம் கி.மீ., தூரம் இயங்கிய பஸ்களை ‘கண்டம்’ செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், குறைந்த அளவிலேயே ‘கண்டம்’ செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது இயக்கத்தில் உள்ள, 22 ஆயிரத்து, 855 பஸ்களில், 10 ஆயிரம் பஸ்களே, அரசு விதிமுறைப்படி இயக்க தகுதி உள்ளவை.
மீதி, 12 ஆயிரத்து, 855 பஸ்கள் காலாவதியாகி இயங்கி வருவதாக, தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2010ஐ ஒப்பிடுகையில், தற்போது பாடாவதி பஸ்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் சரிந்துள்ளது. புது பஸ்களை வழங்கிய அரசு, பராமரிக்க போதிய தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்கவில்லை. இதனால் குறைந்த இயக்கத்திலேயே, பஸ்கள் பாடாவதி ஆகின்றன. தற்போதைய நிலையில்,12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், பாடாவதி நிலையில் இயக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் புது பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பராமரிக்க தொழில்நுட்ப பணியாளர், உதிரி பாகங்களை வழங்கினால் மட்டுமே, பாடாவதி பஸ்களின் இயக்கத்துக்கு முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதிகாரிகள் கூறுகையில், ‘2000 முதல், 2010 வரை, போக்குவரத்து கழங்களை அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், 2011ல் தொடங்கி, 2020 வரை, 14 ஆயிரம் புது பஸ்கள் வழங்கியும், பாடாவதி பஸ்களுக்கு முடிவு கட்ட முடியவில்லை’ என்றனர்.