கோவில்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
கோவில்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவை சார்பில் நடராஜபுரம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண்ணன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் அமுதம், பாலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்காட்சியை குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகசுந்தரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். கண்காட்சியில், முளை கட்டிய தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பழ வகைகள், சத்தான மாவு வகைகள், பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துப் பொருள்கள், பழங்களைக் கொண்டு செய்யப்பட்ட குத்துவிளக்கு ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.மேலும், கண்காட்சியில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம், கொய்யாப்பழம், முளை கட்டிய தானியங்கள், கடலை மிட்டாய் ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாடில்லா பாரதத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா வரவேற்றார். அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.