தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மயானத்துக்கு செல்ல சாலை அமைத்துத்தரக் கோரி,அக்கிராமமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மயானத்துக்கு செல்ல சாலை அமைத்துத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியையடுத்த படர்ந்தபுளி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட மயானத்துக்குச் செல்லசாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது தோணுகால் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கான மயானத்துக்கு ஓடையை கடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். மயானத்தில் அடிப்படை வசதிகளான தண்ணீர், மின்வசதி மற்றும் மயானத்தில் கொட்டகை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துதர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மணி, கிருஷ்ணவேணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் அப்பகுதி பொதுமக்கள் உள்பட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மாணிக்கவாசகத்திடம் அளித்தனர்.