வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றன – கடனாளிகள் வேதனை?குழப்பத்தில் மக்கள்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றன – கடனாளிகள் வேதனை
கொரோனா பொது முடக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு தொழில்கள் நலிவடைந்து பலரும் வேலை, வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் கொரோனா கொடுமையை விட வங்கிகளின் நெருக்கடிகளால் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடன் பெற்றவர்களிடம் தவணையை வசூல் செய்ய வரும் வங்கி அல்லது நிதி நிறுவன ஊழியர்கள் எல்லை மீறி வார்த்தைகளை விடுவதாக சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த திருச்சி சைராபானு, தெய்வானை உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
அண்மையில் தனியார் வங்கிகளின் கட்டாய வட்டி வசூலால் தஞ்சையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி திருவெறும்பூரில் கூட்டுறவு ஊராட்சி மன்றத் தலைவி ஒருவர் கணவருடன் தீக்குளிக்க முயன்றது உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வீட்டுக் கடன், வாகனக் கடன் என வங்கிகளில் பெற்ற கடனுக்காக EMI தவணை செலுத்த 6 மாதங்கள் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால், தளர்வளிக்கப்பட்ட மாதங்களில் தவணையை செலுத்தாதவர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பது, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பிடித்துக்கொள்வது ஆகிய போக்கும் ஒரு பக்கம் தொடர்கிறது. குறிப்பாக தனியார் வங்கிகள் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கண்டுகொள்ளவேயில்லை என்கிறார் திருச்சி தனியார் நிறுவன ஊழியரான ரகுமான்.
இதுமட்டுமல்ல, தனியார் வங்கிகளின் அபராத வட்டிக்கு பயந்து மனைவியின் நகையை அடகு வைத்து மாத தவணையைச் செலுத்தி வருவதாகச் சொல்கிறார் டீக்கடைக்காரரான ஆறுமுகம்.
கொரோனாவிலிருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்பியதும் கடனை அடைத்து விடுவோம் என்கிற வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் மனிதாபிமானத்துடன் நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார்கள் கடன் பெற்றோர்.