ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டர் விவகாரத்தில் சுமார் 1 மணிநேரமாக கச்சிதமாக வீடியோ, படம் என காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உத்தரப்பிரதேச போலீஸ்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைது செய்ய வந்த 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்தது ரவுடி விகாஸ் துபே கும்பல். இது உத்தரப்பிரதேச அரசுக்கு பெரும் தலைவலியாகிப் போனது.
இதனால் வேறுவழியே இல்லாமல் விகாஸ் துபே கும்பலை கூண்டோடு அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் உத்தரப்பிரதேச போலீஸ் இறங்கியது
உ.பி. போலீஸ் என்கவுண்ட்டரில் அடுத்தடுத்து விகாஸ் துபே கூட்டாளிகள் போட்டுத் தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து புதிய திருப்பமாக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் காளி கோவிலில் பதுங்கி இருந்த விகாஸ் துபே சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
விகாஸ் துபே தாமே சரணடைந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனாலும் ம.பி.யில் சிக்கிய விகாஸ் துபேவை பாதுகாப்பாக உ.பி.க்கு கொண்டு வருவதில் போலீசார் கவனமாக இருந்தனர்.
இந்த நிலையில் காலை 7 மணி முதலே விகாஸ் துபே தொடர்பான தகவல்கள் ஒவ்வொன்றாக போலீசாரால் வெளியிடப்பட்டன
முதலில் கான்பூருக்குள் விகாஸ் துபேவை அழைத்துவந்த வாகனம் நுழைந்துவிட்டது என்பதை காட்டுகிற வீடியோவே ரிலீஸ் செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் விகாஸ் துபேவை கான்பூருக்குள் காரில் அழைத்து வரும் காட்சிகள் அதில் இடம்பெற்றன.
இதன்பின்னர் சிறிது நேரத்திலேயே கான்பூருக்கு விகாஸ் துபேவை அழைத்து வந்த வாகனம் விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
அத்துடன் விகாஸ் துபே வந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் படங்களும் வெளியாகின.
அப்போது சம்பவ இடத்தில் பலரும் செல்போனில் படம்பிடித்தனர்.
ஆனால் விகாஸ் துபேவுக்கு என்ன ஆனது என்பதை முதலில் போலீசார் தெரிவிக்கவில்லை.
3-வதாக இன்னொரு கோணத்திலான படங்களை போலீசார் ரிலீஸ் செய்தனர்.
அதில் வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதாகக் காண்பிக்கப்பட்டது.
இந்த படத்தை திடீரென ஏன் போலீஸ் தரப்பு வெளியிட்டது என்பதையும் சொல்லவும் இல்லை. அப்போதும் விகாஸ் துபேவுக்கு என்ன ஆச்சு என்பதைப் பற்றி தகவலை சொல்லவில்லை போலீஸ்.
இதனைத் தொடர்ந்துதான் அந்த பரபரப்பு தகவலை சொன்னது போலீஸ். போலீஸ் வாகனம் கவிழ்ந்த போது அதில் இருந்து விகாஸ் துபே தப்ப முயன்றார். அப்போது போலீசார் விகாஸ் துபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விகாஸ் துபே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என சொன்னது உ.பி. போலீஸ்.
அப்போது விகாஸ் துபேவை ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ வெளியிடப்பட்டது
பின்னர் மருத்துவமனையில் கான்பூர் மேற்கு எஸ்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், கார் விபத்துக்குள்ளான போது விகாஸ் துபே, போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு விகாஸ் தப்பி ஓட முயன்றார். இதற்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் .இதில் விகாஸ் துபேவுக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். தற்போது விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
ஒற்றை வரியில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலப்பட்டார் விகாஸ் துபே என்பதை சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக ஒவ்வொரு பிரேம் பை பிரேமாக படங்களின் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உ.பி. போலீஸ்.