உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டம்? முழு விவரம் -விண்மீன் நியூஸ்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும்!
– அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
சீனாவில் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
இந்த வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளதோடு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் சீனாதான் எனவும் சீன அரசு கொரோனா தொடர்பான உண்மையை மறைத்ததே உலகலாளவிய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது.
மேலும் வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, உலக சுகாதார அமைப்புக்கான நிதியையும் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நேற்று அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வந்தாலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள் உற்பத்தியும் கொரோனாவுக்கான மிகச்சிறந்த பரிசோதனையும் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சீனா கொரோனா பரவல் தொடர்பான ரகசியத்தை மறைத்ததால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனா முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டும் எனவும் அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.