10ம் வகுப்பு முடிவு வரும் முன்பே +1 மாணவர் சேர்க்கை; தமிழக அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் துணிகரம்: கள ஆய்வில் பள்ளிகள் அத்துமீறல் அம்பலம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
10ம் வகுப்பு முடிவு வரும் முன்பே +1 மாணவர் சேர்க்கை; தமிழக அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் துணிகரம்: கள ஆய்வில் பள்ளிகள் அத்துமீறல் அம்பலம்
தமிழகம் முழுவதும் அரசின் உத்தரவை மீறி +1 வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோட்டில் 2 தனியார் பள்ளிகளில் தடையை மீறி +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், காலவரையின்றி மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்பதற்க்கு இதுவரை விடை இல்லை. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளும் கூட ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி பல பள்ளிகள் மும்முரமாக மாணவர் சேர்க்கையை தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக ஈரோடு நகரில் இருக்கக்கூடிய பெரும்பாலான தனியார் பள்ளிகள் தற்போது 11ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளன. 10ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல் கூட இன்னும் வராத ஒரு சூழ்நிலையில் மாணவர்களின் ஆதார் அட்டை, அவர்களுடைய பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு தற்பொழுது 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையையும்,
அதேபோல முதல் பருவத்திற்கான கட்டணத்தையும், புத்தகத்திற்கான கட்டணத்தையும் வசூலிப்பதில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை, நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த விதிமீறல் தற்போது தொடந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பான பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.