உண்மை தான் சுர்ஜித் .
எங்கள் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் விஞ்ஞானிகள் தலை குனிய வேண்டும். சுர்ஜித் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் 70 அடி ஆழத்தில் 16 மணி நேரமாக சிக்கித் தவிக்கும் இளஞ்சிறுவன். தீபாவளி கொண்டாட்டங்கள் அவனுக்கில்லை. அவனுக்காக உலகம் முழுதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். மீட்புக்குழுவினர் போராடுகின்றார்கள். ஆளும் அமைச்சர்கள் அருகில் ஆறுதலாக உள்ளனர். முயற்சிக்கு பாராட்டுக்கள். சுர்ஜித் மீண்டு வர நமது வாழ்த்துக்கள்.
எண்ணற்ற குழந்தைகள் இறந்த பிறகு தான் இவ்விபத்துக்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை எவ்வாறு மூட வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது. அவை முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் இத்தகைய விபத்துக்கள் அறவே நடக்காது. அந்த நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை மன்னிக்க இயலாது.
96 குழந்தைகள் தீயில் கருகிய பிறகு தான் பள்ளிகளின் பாதுகாப்புப் பற்றி பராமரிப்போம், சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவு ஏற்பட்ட பிறகு தான் நீர்வழித் தடங்களைத் தேடுவோம். எண்ணெய் கப்பல் கடலில் கவிழ்ந்த பிறகு தான் பக்கெட்களை தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு ஓடுவோம். குரங்கனி காட்டுத்தீயில் 25 மாணாக்கர்கள் இரவெல்லாம் கருகித் துடித்துச் செத்த பிறகு தான் ஹெலிகாப்டர்கள் இந்திய வல்லரசிடம் இருப்பதே நினைவுக்கு வரும். கஜாபுயலில் கடல் நடுவே நூற்றுக்கணக்கான மீனவன் படகுடன் தொலைந்த பிறகு தான் சாட்லைட் தொடர்பைப் பற்றிச் சிந்திப்போம். பல உயிரிழப்பிற்குப் பிறகு தான் பேனர்களை அகற்றுவது பற்றி பேசுவோம். அதன் பிறகு அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இனி அடுத்த விபத்தின் போது நாமெல்லாம் அந்தக் கரையில் கூடுவோம்.
தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மீட்புப்படையினர் காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மருத்துவர்கள் ஆம்புலன்ஸ்கள் தொலைக்காட்சிகள் பொதுமக்கள் உள்ளூர் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் புடைசூழ ஒளிபரப்புவோம். ஆக்சிஜனை அவன் மூக்கருகே செலுத்துவோம். பாவம் அந்த ஒற்றை மணிகண்டன் ஓடிவந்து உடனிருந்து அப்போதும் போராடுவார். இது வெறும் கற்பனையல்ல நமது பொது புத்தியும் அதைத் தான் சொல்கிறது. ஆம் இந்தியாவில் நடந்த மொத்த ஆழ்துளைக் கிணறு விபத்துக்களில் தமிழ்நாட்டில் தான் அதிகப்படியாக 15% விபத்துக்கள் நடந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ நம்மிடம் திராணியில்லை. நிலவுக்கு சந்திராயனை அனுப்பும் அறிவியல் உலகத்தின் விஞ்ஞானிகளால் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய இளம் பிஞ்சுகளை மீட்கும் தொழில் நுட்பம் கைகூடவில்லை. ஒருவேளை அது கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் தராத தொழிலாகக் கூட இருக்கலாம்.
இப்போதைக்கு 2 வயது சுர்ஜித் 27 அடி ஆழத்தில் இருந்து 70 அடி ஆழத்திற்குள் இறங்கி விட்டான். சேற்றிலும் சகதியிலும் சிக்கியுள்ளான். அவன் அப்பனும் ஆத்தாளும் கதறியழ, சுர்ஜித்தை தத்தமது குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறைந்து போயுள்ளது தமிழகம்.