தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
✍தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரை கண்டித்து காவல்நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
✍தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது45). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று சங்கரம்மாளின் ஆடு ஒன்றை நாய் கடித்ததாக கூறி மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 29பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
✍இந்நிலையில், அந்த பிரட்சனை குறித்து விசாரனை நடத்துவதற்காக செய்துங்கநல்லூர் போலீசார் இன்று காலை 6 மணிக்கு சங்கரம்மாள் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சங்கரம்மாளையும், அவரது மகள் ஐஸ்வர்யாவையும் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், காவல் துறை அதிகாரிகள் தாய் – மகளை ஆபாசமாக பேசி, தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த சங்கரம்மாள் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது மகளையும் குடிக்க வைத்துள்ளாராம். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறிய தாய், மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
✍இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு எஸ்பி ஜெயக்குமார் , டிஎஸ்பி சுரேஷ்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
✍ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறை மீதுள்ள குற்றச்சாட்டு முடிவுக்கு வராத நிலையில், செய்துங்கநல்லூரில் போலீசாரைக் கண்டித்து தாய், மகள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.