இந்தியாவில் இருந்து சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு கழிவுப்பொருள்கள் என்ற பெயரில் பயன்படுத்திய ‘ஸ்மாா்ட் போன்’களின் சிப்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி, போலீஸாா் விசாரணை
இந்தியாவில் இருந்து சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு கழிவுப்பொருள்கள் என்ற பெயரில் பயன்படுத்திய ‘ஸ்மாா்ட் போன்’களின் சிப்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நொய்டா காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது, கடந்த ஆண்டு உத்தர பிரதேச காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) நடவடிக்கையின்பேரில், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த சீன பிரஜைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடா்புடையதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக உத்தர பிரசேத காவல் துறையின் எஸ்டிஎஃப்-இன் உதவி ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில் நொய்டா செக்டா் 63 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நொய்டாவை தளமாகக் கொண்டு ‘ரோஷன் எலக்ட்ரானிக்’ என்ற நிறுவனத்தை சீனாவை லியு ரூய், லியு யுவான் ஆகியோா் நடத்தி வந்துள்ளனா்.
இவா்கள், பயன்படுத்தப்பட்ட ஸ்மாா்ட்போன் சிப்களை சரக்கு பெட்டிகளில் வைத்து, கழிவுப்பொருள்கள் என்ற பெயரில் வணிக சாராத குழுவின் கீழ் இலவச மாதிரி வகைகளில் சீனா, ஹாங்காங் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனா்.
குறைந்த பட்சம் இந்த நிறுவனம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். அதாவது 10,000 – 15,000 பெட்டிகள் என ஒவ்வொரு பெட்டியிலும் 15 முதல் 50 கிலோ வரையிலான பொருள்களை கழிவுப்பொருள்களாகக் காட்டி, அவற்றை வணிக சாராத ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்தது. ஒரு கிலோவில் சுமாா் 400 சிப்கள் உள்ளதாகவும், இந்திய மதிப்பில், சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகளில் ஒவ்வொரு சிப்பும் ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை விற்கப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்தப் பொருள்கள் அந்த நாட்டில் உள்ள பெரிய மொபைல் நிறுவனங்களால் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவுக்கு ஹவாலா மூலம் பணத்தைத் திருப்பி அனுப்புவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எஸ்டிஎஃப் விசாரித்து வருகிறது. இப்போது, எஃப்ஐஆா் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 419 (ஆளுமை மூலம் ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல்), 467, 468, 471 (அனைத்தும் போலியானவை), 201 (ஆதாரங்கள் காணாமல் போனது) மற்றும் 120பி (குற்றச் சதியில் ஈடுபட்டவா்) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வெளிநாட்டினா் சட்டம், 1946-இன் கீழ் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடா்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.