சாமியாரின் அருள்வாக்கை நம்பி திருப்பதி சேஷாசலம் மலை அடிவாரத்தில், புதையலுக்காக 80 அடிக்கு சுரங்கம் தோண்டிய 6 பேர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
திருப்பதி: சாமியாரின் அருள்வாக்கை நம்பி புதையலுக்காக ஓராண்டாக சுரங்கம் தோண்டிய 6 பேர் கைது*
திருப்பதி சேஷாசலம் மலை அடிவாரத்தில் புதையலுக்காக 80 அடிக்கு சுரங்கம் தோண்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டம், திருப்பதி மங்கலம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சேஷசால வனப்பகுதி மலை அடிவாரத்தில் புதையலுக்காக அவர்கள் 80 அடிக்கு சுரங்கம் தோண்டி வந்தது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து வாரந்தோறும் வெவ்வேறு ஆட்களை அழைத்துவந்து,சுரங்கம் தோண்டியதாக, பிடிபட்டவர்களில் முக்கிய நபர்களான 2 பேர் கூறியுள்ளனர்.
சாமியார் ஒருவர் கூறிய அருள்வாக்கின்படி கடந்த ஓராண்டாக அவர்கள் இச்செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைத்துவிடும் என்றும், அதில் பாதியை தங்களுக்கும் தருவதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியதாக, அலிபிரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.