நான் கருப்பு திராவிடன்.. ஏன் இப்படி திடீர் பதிவு .. பேசுபொருளாகி ட்ரெண்டாகும் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டா போஸ்ட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
நான் கருப்பு திராவிடன்.. ஏன் இப்படி திடீர் பதிவு .. ட்ரெண்டாகும் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இந்தி திணிப்பு விவகாரம் ஒருபக்கம், மோடி அம்பேத்கர் விவகாரம் ஒரு பக்கம் என சோஷியல் மீடியாவுக்கு சரியான தீணி கிடைத்துள்ளது.
பட்டிமன்றம் வைத்து பேசினாலும், தீராத பெரும் பிரச்சனையாக இவ்விவகாரம் ஒரு புயலை கிளப்பி வருகிறது.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா பேசி இருந்தார். இளையராஜாவின் இந்தக் கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் கருப்பு ஆடைகளை அணிந்து, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அதிக அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. மோடியை தந்தை இளையராஜா ஆதரித்துள்ள நிலையில், மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட கொள்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ள சூழலில், ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ்தாய் தமிழின் அடையாளமான ழ கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டு இருந்தார். முன்னணி இசையமைப்பாளர் ஒவ்வொரு கருத்தும் மிகவும் உற்றுநோக்கப்பட்டு ரசிகர்களால் அது வைரலாக்கப்பட்டு வருகிறது.