கோவில்பட்டியில் பெண் மரணத்தில் மர்மம் திடீர் சாலைமறியல்
பெண் மரணத்தில் மர்மம் என கூறி உறவினர்கள் கோவில்பட்டியில் திடீர் சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த தோட்டிலோவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கட்டடத் தொழிலாளி கருப்பசாமி. இவருக்கும், கஞ்சம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் – ஜெபமாலை தம்பதி மகள் மல்லிகாதேவிக்கும்(26) கடந்த 2013இல் திருமணம் நடந்துள்ளது. மல்லிகாதேவி – கருப்பசாமி தம்பதிக்கு கன்னிகா(5), சுவாதி(3), கவின்ராஜ்(1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், கருப்பசாமியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரிகள் மல்லிகாதேவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள் என்றும் மல்லிகை தேவி உறவினர்கள் குற்றச்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மல்லிகாதேவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கருப்பசாமியின் உறவினர்கள் மல்லிகாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மல்லிகாதேவியின் சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லிகாதேவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டதாகவும், அவரது சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுகுறித்து ஏற்கெனவே சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் மல்லிகாதேவியின் உறவினர்கள் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தவுடன் வட்டாட்சியர் மணிகண்டன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மல்லிகாதேவியின் சாவிற்கு காரணமானவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் உரிய மனு அளிக்கவும் அறிவுறுத்தினர். அதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.