ஓடும்ரெயிலில் பெண்டிக்கெட் பரிசோதிகரிடம்,செயினை திருடி ஒடும் ரெயிலில் குதித்து ஓடிய கொள்ளைக்காரன்?
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில் சென்றது. இந்த ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் டிக்கெட் பரிசோதகர் ரெஜினி ஈடுபட்டார்.
அந்த ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. கடற்கரையிலிருந்து புறப்பட்ட ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெஜினி, முதல் வகுப்பு பெட்டியின் வாசல் அருகே நின்றுகொண்டிருந்தார். கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், பயணி ஒருவர் ரயிலிலிருந்து கீழே குதித்து ஓடினார்.
அந்தநபர் டிக்கெட் எடுக்காததால் டிக்கெட் பரிசோதகருக்குப் பயந்து ரயிலிலிருந்து குதித்து தப்பி ஓடுவதாக பயணிகள் கருதினர். அவர் ஓடிய சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் ரெஜினி, அவரைப்பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். அதற்குள் ரயில் வேகம் எடுக்கத் தொடங்கியது. டிக்கெட் பரிசோதகர் எதற்காக அவரைப்பிடிக்கச் சொல்கிறார் என்று பயணிகளுக்குப் புரியவில்லை. பின்னர், என் செயினை திருடிக்கொண்டு அந்த நபர் ஓடுகிறார் என்று ரெஜினி கூறியதும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதற்குள் அந்தத் திருடன் மின்னல் வேகத்தில் ஓடி பயணிகள் கூட்டத்தோடு தப்பிச் சென்றுவிட்டான். அதனால் அவனைப் பிடிக்க முடியவில்லை. செயினைப் பறிக்கொடுத்த டிக்கெட் பரிசோதர் ரெஜினி, மாம்பலம் ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதில் `டிக்கெட் பரிசோதனையின்போது என் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்கச் செயினை மர்ம நபர் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரெஜினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீஸார், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் ரெஜினி கூறுகையில், “கடற்கரையிலிருந்து புறப்பட்ட மின்சார ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக நான் டிக்கெட் பரிசோதனை செய்துவந்தேன். கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்தபோது முதல் வகுப்பு வாசல் அருகே நின்றுகொண்டிருந்தேன். இந்தச் சமயத்தின் என் பின்பக்கத்திலிருந்து தாலிச் செயினைப் பறித்துக் கொண்டு ஒருவர் ஓடினார். அவர் எப்படி வந்தார் என்பதைக் கவனிக்கவில்லை. திருடன் திருடன் என்று நான் சத்தம் போடுவதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது. அதனால் அவனைப் பிடிக்க முடியவில்லை. நல்லவேளை ரயிலின் கம்பிகளை பலமாகப் பிடித்திருந்ததால் நான் கீழே விழாமல் உயிர் தப்பினேன்” என்றார் அதிர்ச்சியுடன்.