உலகின் முதன்முதலில் கொரோனா தோன்றிய இடத்தை கண்டுபிடிக்காவிட்டால் கோவிட் 26, கோவிட் 32ஐ சந்திக்க தயாராக இருங்கள்: அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
உலகின் முதன்முதலில் கொரோனா தோன்றிய இடத்தை கண்டுபிடிக்காவிட்டால் கோவிட் 26, கோவிட் 32ஐ சந்திக்க தயாராக இருங்கள்: அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை*
வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என கண்டுபிடிக்காவிட்டால், எதிர் காலத்தில் கோவிட் 26, கோவிட் 32 என பல வைரஸ்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக வேண்டும்,’ அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளவில் அனைத்து நாடுகளும் கொரோனா, உருமாறிய கொரோனா வைரஸ் என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், அது எங்கிருந்து உருவானது என்பதை நிபுணர்கள் இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. கடந்த மார்ச்சில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் உருவானது குறித்த அறிக்கையை வெளியிட்டது. எனினும், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை முழுமையாக கண்டறியப்படவில்லை.
ஆனால், ஆய்வகத்தில் இருந்து இது பரவி இருப்பதற்கான சாத்தியமில்லை,’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. அதோடு, இது பற்றிய கூடுதல் விசாரணைக்கும் அழைப்பு விடுத்தது. இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிக்கை, ‘சீனாவின் வுகான் வைரஸ் ஆய்வகத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019ம் ஆண்டு நவம்பரிலேயே கொரோனா வைரசல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்,’ என செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி, இந்த வைரஸ் உருவானது குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 2 முன்னணி தொற்று நோய் நிபுணர்கள், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை கண்டறிந்து எதிர்காலத்தில் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு, உலக நாடுகளுக்கு சீன அரசின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை,’ என வலியுறுத்தி இருக்கின்றனர்.
முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின்போது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையராக இருந்த ஸ்காட் கோட்லீப், தற்போது பைசர் வாரியத்தில் இடம் பெற்றுள்ளார். இவர், ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்து பரவத் தொடங்கி இருக்கலாம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கும் தகவல்கள் அதிகரித்துள்ளது. எனினும், இந்த கோட்பாட்டை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை சீனா வழங்கவில்லை. அதற்கு மாறாக வனவிலங்குகளிடம் இருந்து வைரஸ் தோன்றியதா என்பதற்கான அறிகுறிகளை தேடுவது பலன் தராது,’’ என்றார். தடுப்பூசி மேம்பாட்டுக்கான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மையத்தின் இணை இயக்குனர் பீட்டர் ஹோடெஸ் கூறுகையில், “கொரோனா எவ்வாறு தோன்றியது என கண்டறியப்படாமல் இருப்பது, எதிர்காலத்தில் மேலும் பல கொரோனா வைரஸ்கள் பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்காவிட்டால் எதிர்காலத்தில் கோவிட் 26, கோவிட் 32 போன்ற நோய்களை எதிர்கொள்வதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும்,’’ என்றார். இவர்களின் எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.