தவிடுபொடியான பாஜக மோடி,அமித் ஷா பிளான்.. “வீல்சேரில்” உட்கார்ந்தபடியே விஸ்வரூபம் எடுத்த மமதா.. 2016 ரிட்டர்ன்!*
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பாஜக மாஸ்டர்மைண்ட் அமித் ஷா போட்டு வைத்திருந்த திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகி உள்ளது.. எப்படியாவது வங்கத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜகவின் கனவை “வீல்சேரில்” உட்கார்ந்தபடியே தகர்த்து இருக்கிறார்.. வங்கத்து தீதி மமதா!
5 மாநில தேர்தல் அறிவிப்பதற்கு முன்பில் இருந்தே மேற்கு வங்கம் மீது பாஜகவும் அமித் ஷாவும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தினார். லோக்சபா தேர்தலின் போதே மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பாஜக உழைக்க ஆரம்பித்துவிட்டது.
லோக்சபா தேர்தலிலேயே மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களை வென்றது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைதான் வென்றது. அப்போதே மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறிவிட்டது.
சூட்டோடு சூடாக சட்டசபை தேர்தலிலும் கொடி நாட்டி விடலாம் என்றுதான் பாஜக திட்டமிட்டது. இதற்காக அந்த கட்சி ஏகப்பட்ட பிளான்களை களமிறக்கியது. முதல் விஷயம்.. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட அதிகாரி குடும்பத்தையே உடைத்தது பாஜக. மொத்தமாக சுவேண்டு அதிகாரியின் குடும்பத்தை கட்சி மாற வைத்தது.
அதிகாரி குடும்பத்தில் ஒவ்வொருவராக பாஜக பக்கம் தாவி மமதாவிற்கு அதிர்ச்சி அளித்தனர். மமதாவின் சின்ன சின்ன சீக்ரெட் தொடங்கி அவரின் வீட்டில் சமையலறை வரை செல்ல கூடிய அதிகாரம் கொண்ட அதிகாரி குடும்பத்தையே வளைத்து பாஜக ஷாக் கொடுத்தது. அதோடு சுவேண்டு அதிகாரியை மமதாவிற்கு எதிராக களமிறங்க வைத்த பாஜக எதிர்பார்க்காத டிவிஸ்ட்களை கொடுத்தது.
ஒரு பக்கம் திரிணாமுல் உடைத்த பாஜக இன்னொரு பக்கம் தீலிப் கோஷ், முகுல் ராய் என்று உள்ளூர் கைகளை களமிறங்கியது. அதோடு மிதுன் சக்ரவர்த்தி போன்றவர்களை உள்ளே கொண்டு வந்து மமதாவிற்கு பாஜக கிலி கொடுத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அண்டை மாநில மக்களை வைத்தும் பாஜக நெருக்கடி கொடுத்தது.
மேற்கு வங்கத்தில் இருக்கும் பீகாரிகளின் வாக்குகளை கவர அந்த மாநில அரசியல் தலைவர்களை களமிறக்கியது. அடுத்தடுத்து பிரதமர் மோடியை வைத்து பல மீட்டிங்குகளை நடத்தியது. 5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில்தான் பிரதமர் மோடி அதிக மீட்டிங்குகளை நடத்தினார். மேற்கு வங்கம் மீது மட்டும்தான் மோடி – அமித் ஷாவின் கவனம் முழுக்க இருந்தது.
இதெல்லாம் போக 8 கட்டமாக தேர்தல் நடந்ததால் தொகுதி வாரியாக சல்லடை சல்லடையாக பாஜக தேர்தல் பணிகளை செய்தது. ஆனால் மமதா பானர்ஜியோ உட்கார்ந்தபடியே இந்த தேர்தலில் வென்று இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் இவரை சில மர்ம நபர்கள் தாக்க, காலில் அடிபட்டு வீல் சேருக்கு மாறினார் மம்தா. நந்திகிராம் எப்போது இவர் கீழே விழுந்தாரா அப்போதே இவர் எழுந்து நின்றுவிட்டார்.
அந்த வீழ்ச்சிதான் இவரின் இன்னுமொரு எழுச்சிக்கு காரணமாக இருந்தது. காலில் கட்டோடு இவர் நடத்தியபேரணிகள் மக்கள் இடையே அனுதாப அலையை பீறிட வைத்தது. போகிற இடங்களில் எல்லாம் தீதி, தீதி என்று இவரை கொண்டாட வைத்தது. எந்த நந்திகிராம் போராட்டம் இவருக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்ததோ அதே நந்திகிராம் தாக்குதல் இவருக்கு மீண்டும் ஒரு அரசியல் எழுச்சியை கொடுத்தது.
வங்காளிகளும் தமிழர்களை போல செண்டிமெண்ட் ஆட்கள்தான். மமதாவிற்கு அடி என்றதும்.. பெண்கள், முதியவர்கள் என்று பலர் உணர்ச்சிவசப்பட்டனர். மொத்தமாக தேர்தல் களம் மாறியதே இங்குதான். அதோடு பாஜக தலைவர்களிடம் பார்க்க முடியாது ஒரு நெருக்கமான உணர்வை மமதாவிடம் வங்காளிகள் பார்க்கிறார்கள். இதுதான் போகிற இடங்களில் எல்லாம் மமதாவிற்கு ஆதரவு பெருக காரணமாக இருந்தது.
உண்மையில் இந்த தேர்தலுக்காக மம்தா ஹார்ட் வொர்க் எல்லாம் செய்யவில்லை.. மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு ஸ்மார்ட் வொர்க் மட்டுமே செய்தார். பெரிதாக கூட்டம் எல்லாம் பாஜக அளவிற்கு மம்தா நடத்தவில்லை. மக்களின் சென்டிமெண்ட்டை உணர்ந்து திரிணாமுல் சிறப்பாக பிளான் போட்டு இந்த தேர்தலில் வென்றுள்ளது. 150-160 வரை மட்டுமே மமதா வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டதை மொத்தமாக மமதா உடைத்து தள்ளி இருக்கிறார்.
2016ல் 211 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. தற்போதும் கிட்டத்தட்ட அதே அளவிற்கு 202-203 இடங்களை வெல்லும் நிலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சென்றுள்ளது. சோனார் பங்களா என்று பாஜக உருவாக்கிய திட்டங்களை எல்லாம் மமதா அடித்து உடைத்து மீண்டும் அரியணையில் அமர்ந்து உள்ளார். தேசிய அளவிற்கு மோடிக்கு எதிராக தலைவர்கள் இல்லாத நிலையில்.. மமதாவின் இந்த எழுச்சி.. அவருக்கு தேசிய அளவில் புதிய அரசியல் இமேஜை கொடுக்கும்.. அவரின் அரசியல் வாழ்க்கையின் புதிய பாதையே இனிதான் தொடங்க போகிறது!