வாசனை தட்டி கொடுத்து ரொம்ப நேரம் பேசிய மோடி.. இன்று டெல்லியில் இருவரும் அதிரடி சந்திப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை சென்னைக்கு வந்திருந்தபோது விமான நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை தனியாக ஸ்பெஷலாக நெருங்கிச் சென்று ரொம்ப நேரம் பேசினார். டெல்லிக்கு வாங்க என்றும் அழைத்தார். இன்று டெல்லி சென்ற வாசன், மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை ஜி.கே.வாசன் பாஜகவில் இணையப் போகிறாரா, தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்படப் போகிறாரா என்ற பழைய எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியுள்ளது.
தமிழக பாஜக தலையில்லாமல் தவித்துக் கொண்டுள்ளது. அதிரடியாக செயல்பட்டு வந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகிப் போனதற்குப் பிறகு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
இந்த நிலையில்தான் ஜி.கே.வாசன் பாஜகவில் கட்சியை இணைக்கப் போகிறார் பாஜக தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் அதை தமாகா தரப்பு மறுத்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்காக சென்னை வந்த போது வாசனிடம் நெருங்கிப் பேசினார் பிரதமர் மோடி. வாசனிடம் உரிமையாகப் பேசிய அவர் டெல்லிக்கு வாங்க உங்களுடன் பேச வேண்டும் என்றும் கூறினார். இதனால் எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்தது. நிச்சயம் வாசன், பாஜக பக்கம் போகத்தான் போகிறார் என்று அடித்துப் பேசவே ஆரம்பித்து விட்டனர்.
தமிழக அரசியல்வாதிகளில் வாசன் மிகவும் டீசன்ட்டானவர். யாரையும் அநாகரீகமாக பேச மாட்டார். தேவையில்லாத வார்த்தைகளை விட மாட்டார். பொறுமையாக பேசுவார். அதிர்ந்து பேச மாட்டார். திட்ட மாட்டார். காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார். தப்புத் தப்பாகவும் பேச மாட்டார். இப்படி நிறைய பிளஸ்களை வைத்துள்ள அவருக்கு நம்ம வீட்டுப் பிள்ளை என்ற இமேஜும் உள்ளது.
எல்லாக் கட்சியிலும் வாசனை விரும்புபவர்கள் உள்ளனர். அது திமுகவாக இருந்தாலும் காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் இருக்கவே செய்கிறது. இந்த வகையில் தற்போது வாசன், மோடியைச் சந்தித்திருப்பது எதற்காக என்று தெரியவில்லை. அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் வாசன் சந்திக்கவுள்ளாராம்.