ஆபத்தான இடத்தில் விக்ரம்லேண்டர் ஐரோப்பிய விண்வெளி நிலையம் எச்சரிப்பு
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது.
லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் டன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.
தென் துருவம் குறித்தும் லேண்டர் நிலை குறித்தும் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சந்திரனின் மேற்பரப்பு (தென் துருவம்) ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும் அங்கு சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சு நன்றாக சந்திர தூசியை சந்திக்கின்றன.
இதன் முடிவுகள் ஆச்சரியமானவை, கணிக்க முடியாதவை மற்றும் அபாயகரமானவை. அங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். மேலும் தூசுகள் நிறைந்த பகுதியாகும்.
சந்திரனில் உள்ள தூசி, விக்ரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தலாம். சூரிய பேனல்கள் மற்றும் பிற மேற்பரப்புகள் அவற்றின் செயல்திறனை குறைக்கலாம்.
மின்காந்த சக்திகள், சந்திரனின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள தூசுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள் எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம்.
சந்திர தூசி மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் அதன் செயல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
லேண்டர் தரையிறங்கும் போது சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்கக் கூடியதாக இருக்கலாம். செங்குத்தான சரிவுகள் அல்லது பெரிய கற்பாறைகள் போன்ற ஆபத்துகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளது.
நிலவில் கடைசியாக காலடி வைத்த யூஜின் செர்னனின் அனுபவத்தை மேற்கோள் காட்டி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும் போது,
லேண்டர் உயிர்ப்புடன் இருக்கும் என்றால், நீங்கள் தொடர்ந்து விண்கலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தூசி பிரச்சினையை எதிர்த்துப் போராட வேண்டும் எனக் கூறி உள்ளது.