டாஸ்மாக் கடைகள் மூடல் தாய்மார்களுக்கு கிடைத்த வெற்றி?மக்கள்நீதி மையம் கமல்ஹாசன்-முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
டாஸ்மாக் மூடல் -தாய்மார்களுக்கான வெற்றி: கமல்
டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, தாய்மார்களுக்குக் கிடைத்த வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக மதுரை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதில், “டாஸ்மாக் திறப்பதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடி, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இதுகுறித்து மநீம தலைவர் கமல்ஹாசன், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மநீம மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது எனத் தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. வெல்லும் தமிழகம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, “மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் 2ஆவது நாளில் ரூ.122 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடை திறந்த 2 நாட்களில் சுமார் ரூ.294 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.