விஜய் போன்று மேலும் பலர் அரசியலுக்கு வர வேண்டும்: தெலுங்கானா புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் போர் கொடி
ஆலந்தூர்:தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-நான் டெல்லி சென்றது, அவசரப் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பயணம் தான். எனது டெல்லி பயணத்திற்கும், பஞ்சாப் மாநில கவர்னரின் திடீர் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதைப்போல் டெல்லியில் மத்தியமந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசியதும், திடீர் சந்திப்பு அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புதான்.அவரிடம் புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனை நடத்தினேன்.நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று, அவரை வாழ்த்துகிறேன். நமது நாடு, ஜனநாயக நாடு. இங்கு இவர் தான் அரசியலுக்கு வரவேண்டும், அவர் வரக்கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டிகள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.