கோவில்பட்டியில் சிறுமிக்கு அவசரச்சிகிச்சைக்கு அனுமதி கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா? சிகிச்சைக்கு உதவிய வட்டாட்சியர்.முழுவிவரம்-விண்மீன் நியூஸ்
அவசர சிகிச்சைக்கு மதுரை செல்ல அனுமதி கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் – சிறுமி சிகிச்சை பெற உதவிய வட்டாட்சியர்
கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் – முத்துமாரி தம்பதி. சலவைத் தொழிலாளியான ஆறுமுகத்தின் மகள் லட்சுமிபிரியா(12). இவர் புதுக்கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து தேர்வாகியுள்ள இவருக்கு பிறந்து 5 மாதம் முதல் சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு மாதம் ஒருமுறை மதுரைக்குச் சென்று பரிசோதனை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து லட்சுமிபிரியாவை அவரது பெற்றோர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.ஆனால், கடந்த சில நாள்களாக லட்சுமிபிரியாவுக்கு வயிறு வீங்கி, இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக மதுரை செல்ல அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் தமிழக அரசின் இ-பாஸ் மின்னஞ்சல் முகவரியில் சனிக்கிழமை விண்ணப்பித்துள்ளார். ஆனால் திங்கள்கிழமை வரை அனுமதி ஏதும் கிடைக்கப்பெறாமல் காத்திருப்பில் இருந்துள்ளது.
இதையடுத்து, மகளின் அவசர சிகிச்சைக்கு மதுரை செல்ல அனுமதி கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முத்துமாரி, லட்சுமிபிரியா மற்றும் அவரது உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக் குழுவினருடன் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து கேள்விபட்ட தாசில்தார் மணிகண்டண் சிறுமி மதுரைக்கு சென்று அவசர சிகிச்சை பெறுவதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.