இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முப்படைகள் மரியாதை? டெல்லி போலீஸ் நினைவுச்சின்னத்திற்கு சல்யூட்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முப்படைகள் மரியாதை.. டெல்லி போலீஸ் நினைவுச் சின்னத்திற்கு சல்யூட்.
டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படை மரியாதை இன்று செய்யப்படுகிறது. இதற்கான விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவ உள்ளது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முப்படை மரியாதை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க கொரோனாவிற்கு எதிராக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவை தடுக்கும் பொருட்டு தீவிரமாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படை மரியாதை இன்று செய்யப்பட உள்ளது. இதற்கான விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவ உள்ளது.
அதேபோல் கப்பற்படையில் இன்று இரவு விளக்குகள் மூலம் அலங்காரம் செய்யப்பட உள்ளது . நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முப்படை மரியாதை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் முப்படை தளபதி பிபின் ராவத் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பணிகளை செய்வதாக அவர் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லியில் உள்ள போலீஸ் மெமோரியலில் மலர் வளையம் வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மரியாதை செய்யப்படுகிறது. அதன்படி தற்போது டெல்லியில் போலீஸ் நினைவுச் சின்னம் மீது விமானப் படை ஹெலிகாப்டர்கள் மலர்தூவியது.
இதை தொடர்ந்து நாடு முழுக்க பல்வேறு நகரங்களுக்கு மேல் விமானப்படையின் விமானங்கள் மரியாதை அணிவகுப்பு செய்ய உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த விமானப்படை அணிவகுப்பு நடக்கும். டெல்லியில் இந்த அணிவகுப்பு மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து திருவனந்தபுரம், அசாமின் திப்ருகார்க் பகுதியில் இருந்து கட்ச் வரை இந்த விமானங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மேல் பறக்கும். நாடு முழுக்க இருக்கும் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது இந்த விமானங்கள் பறந்து சென்று அதன்மீது மலர்களை தூவும். தமிழகத்தில் கோவை மற்றும் சென்னை மீது விமானங்கள் பறக்க உள்ளது.
500 மீட்டர் உயரத்தில் மிக தாழ்வாக இந்த விமானங்கள் பறந்து செல்லும். இதனால் மக்கள் எளிதாக இந்த நிகழ்வை பார்க்க முடியும்.
போர் விமானங்கள் சுகோய் -30 எம்கேஐ, ஜாகுவார் மற்றும் மிக் 29 ஆகிய விமானங்கள் நாடு முழுக்க பறக்க உள்ளது. டெல்லியில் ராஜ வீதியில் இந்த விமானங்கள் இன்று காலை பறக்கிறது.
டெல்லியில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, லோக்நாயக் மருத்துவமனை, ஆர்எம்எல் மருத்துவமனை, கங்கா ராம் மருத்துவமனை, பாபா சாகேப் அம்பேத்கார் மருத்துவமனை, மேக்சாகேத் மருத்துவமனை, ரோகிணி மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை மீது மலர்கள் தூவப்பட்ட உள்ளது.
அதேபோல் மருத்துவமனைகளுக்கு வெளியே நன்றி செலுத்தும் விதமாக நாடு முழுக்க ராணுவம் பாடல்களை ஒளிபரப்பவும் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் மலர் தூவவுள்ளன. மேலும் விமானப்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த தலா 2 ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபடுகின்றன. காலை 10. 30 மணிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மீதும், 10.35க்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனை மீதும் மலர் தூவப்படும். 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனை மீது மலர்கள் தூவி டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்படும்
இந்திய கடற்படைக்கு சொந்த விமானங்களும் இதில் கலந்து கொள்ளும். கோவா, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலை 10-10.30 க்கு இந்த மலர்கள் தூவப்படும்.
மேலும் நாடு முழுக்க கடல் பகுதிகளில் கடற்படையின் 46 ஐசிஜி கப்பல்கள் அணிவகுப்பை நடத்த உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சைரன்கள் ஒலிக்க, பட்டாசுகள், வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட உள்ளது. நாடு முழுக்க 25 இடங்களில் இந்த மரியாதை செய்யப்படும். மொத்தம் 7516 கிலோ மீட்டர் கடல் பகுதியில் இன்று இரவு இந்த மரியாதை செய்யப்படும். இந்த நிகழ்வு இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரை நடக்கும்.
நாடு முழுக்க போர்பந்தர், ஓகா, ரத்தினகிரி, தஹானு, முருட், கோவா, மங்களூர், கவரத்தி, காரைக்கால், சென்னை, கிருஷ்ணபட்டினம், நிசாம்மாபட்டினம், புதுச்சேரி, காக்கிநாடா, பர்தீப், சாகர் தீவு, போர்ட் பிளைர் தீவு, திகில் பூர் தீவு, ஹட் பே, கேம்பெல் பே ஆகிய இடங்களில் இந்த கடற்படை அணிவகுப்பு நடக்கும்.
கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் கொரோனா பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமான மனித சங்கிலியும் இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது