திருப்பூரிலிருந்து ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று திருப்பூரில் நல்லாக்கவுண்டர் அறிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
திருப்பூர்: ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று திருப்பூரில் நல்லாக்கவுண்டர் அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர் திருப்பூரில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டரை மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தை சிதைக்கும்நோக்கில், டிராக்டர் பேரணியில் மோடி அரசே வன்முறையாளர்களை ஏவி விட்டு, விவசாயிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளிடம் ஆதரவு இல்லை என்று சொல்வது தவறான பிரச்சாரம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு தோட்டத்தில் இருந்தும் 10 தேங்காய்கள் வீதம், ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம். ஒருவார காலத்துக்குள் இதைச் செய்ய உள்ளோம். தற்போது கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் தேங்காய் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
டெல்லியில் நெல்,கோதுமை மற்றும் காய்கறிகள் விளைகின்றன. ஆனால் தேங்காய் விளைச்சல் இல்லை. ஆகவே தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய்களை, மிக பிரமாண்டமாக நடத்த உள்ளோம். இதையடுத்து தமிழகத்தில் இருந்து 100 பேர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், தலைவர் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளர் பழ.ரகுபதி உள்பட பலர் உடனிருந்தனர்.