நடிகை ஜோதிகா கோவில்களை பற்றி என்ன பேசினார்?சமூக அக்கறையான பேச்சை திரித்த , காத்திருந்த எதிரிகள்? முழு விபரம் – விண்மீன்நியூஸ்
தமிழ் சினிமாவின் நட்சத்திரக் குடும்பங்களில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா , கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர்.
இந்தக் குடும்பம் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்குத் தேவையான பல உதவிகளை முன் வந்து செய்பவர்கள்.
அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுவது தான் “அகரம் அறக்கட்டளை “. இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா, கணவர், குழந்தைகள் என சில வருடம் சினிமாவிற்கு முடக்குப் போட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக அக்கறை கொண்டப் படங்களாகத் தேர்வு செய்து நடித்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கியுள்ளார். இதற்காக சமீபத்தில் நடைபெற்ற JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அப்போது பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்குப் பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறினார்.
இதனால் கடுப்பான சில நெட்டிசன்ஸ் லட்சக்கணக்கில் செலவு செய்து மேக்கப் போடுவது, கோடிகளை கொட்டிப் படம் எடுப்பது, உடை, கார்
லொட்டு லொசுக்குனு ஆடம்பரத்திற்காக செலவு செய்வதை விட்டுவிட்டு மருத்துவமனை , பள்ளிக்கூடம் கட்டலாமே எனக் கேள்வி கேட்டதுடன்
” உன் மாமனார் காசுல அந்தக் கோயிலை கட்டல ராஜராஜர் தன் பக்தியால் கட்டினார் என ஜோதிகாவிக்ரு அறிவுரை கூறி ஆளாளுக்குத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும், நடிகை ஜோதிகா குறித்தப் பேச்சாகவே உள்ளது……
தஞ்சை கோயிலுக்கு எதிராக இவர் பேசி விட்டார் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்!!
நடிகர் எஸ்.வி.சேகரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
அப்படி என்ன தான் பேசினார் ஜோதிகா?
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ஜோதிகாவையும் பாரபட்சம் இல்லாமல் வாழ வைத்தது..
20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு பிழைப்புக்காக வந்தவர் சொந்த முயற்சியில் திரை உலகில் உயர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிக்க முக்கியக் காரணம் ஜோதிகாவின் டெடிகேஷன் தான்!!
பெரிதாக எந்த விவகாரத்திலும் சர்ச்சையிலும் சிக்காத ஜோதிகா, இப்போது ஒரு பிரச்சனையில் பேசப்பட்டு வருகிறார்…..
மதரீதியான பிரச்சனை என்பதால் இதன் எதிர்ப்பும், வலுப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை ஜோதிகா இழிவுபடுத்தி விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்..
இதில் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்துள்ளது நடிகர் எஸ்வி சேகர் தான்…
ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு… கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்குப் பிடிக்குமே) சாலவும் நன்று… இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்குப் பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்… உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பல இந்து மத ஆதரவாளர்களும் தலைவர்களும், உங்களுக்கு உதாரணம் காட்ட கோயில் தான் கிடைச்சதா, சர்ச், மசூதி கண்ணுக்குத் தெரியலையா? இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்..
தஞ்சை கோயில் ஹிந்துகளின் நம்பிக்கை அடையாளம், அதை கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கண்டனங்கள் எழுந்தபடியே உள்ளன.
உண்மையில் ஜோதிகா மேற்கோள் காட்ட இந்து கோயிலை சொல்லி இருக்கக் கூடாது.. ஒருகுறிப்பிட்ட இனத்தவர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்து , யோசித்துப் பேசியிருக்க வேண்டும்.. சாதாரண நபர்களே எது பேசினாலும் உற்று கவனிக்கப்படும் நிலையில், ஒரு திரைப்பிரபலம் பேசும் போது நிகழ்கால சூழல்கள் என்ன என்பதை உணர்ந்து தான் உதாரணம் சொல்லிப் பேசியிருக்க வேண்டும்
அதே சமயம், ஜோதிகா எந்த உள்நோக்கத்துடனும் இதைப் பேசவில்லை என்றே தெரிகிறது
காரணம், இந்த ஆஸ்பத்திரி நிலைமையை அவர் சொல்லும் போது வார்த்தை வராமல் தொண்டை கம்மியது.. கண் கலங்கியது.. அந்த அளவுக்கு ஆஸ்பத்திரியின் சூழல் அவரை மனதளவில் பாதித்திருக்கலாம்.
மேலும் இந்தக் கோயில் நிகழ்வின் போதே ஷூட்டிங்கும் நடந்ததால், டக்கென ஒப்பிட்டுப் பேசியிருப்பார் என்றே தெரிகிறது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் சிவகுமார் சிறந்த ஆன்மீகவாதி – அறிவாளி – புராண, இதிகாச, இலக்கியங்களை வலியுறுத்தி சொல்லி வருபவர்… அதனால் வேண்டுமென்றே ஒரு சாராரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஜோதிகாவுக்கு துளியும் இருக்காது என்றே தெரிகிறது
அப்படி இஸ்லாமியராக தன்னை காட்டிக் கொள்ள ஜோதிகா முயல்வதாக இருந்தால், சூர்யாவை கல்யாணம் செய்து கொண்டு, இங்கேயே இந்து முறைப்படி குடும்பமும் நடத்திக் கொண்டிருக்க மாட்டார்..
சொந்தமாக கல்வி நிறுவனத்தை நடத்தி வருவதால், ஏழை மாணவர்களின் துயரத்தைக் கண்ணால் கண்ட வலியாகக் கூட இது வெளிப்பட்டிருக்கலாம்…
அதற்காக ஜோதிகா மீது தனிநபர் தாக்குதல்களை மிக மோசமாகத் தொடுப்பது அழகல்ல. விமர்சனங்களை பாசிட்டிவ் விமர்சனங்களால் எதிர்கொள்ளும் மனநிலை இங்கு குறைவாகவே உள்ளது..
ஜோதிகா செய்தது அயோக்கியத்தனம் என்றால் “மீடியாவில் இருக்கும் பெண்கள் மேலதிகாரிகளை அட்ஜஸ்ட் பண்ணித் தான் உயர் பொறுப்புக்கு வருகிறார்கள்” என்று எஸ்வி சேகர் அன்று பேசியதை எந்தக் கணக்கில் வைத்து கொள்வது?
என்ற கேள்விக்கு பதில் இல்லை. உண்மையில் ஜோதிகா தமிழர்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் அந்த வீடியோவில் ஒரு பதிவும் இடவில்லை..
உண்டியலில் போடும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பயன்படும் ஆஸ்பத்திரிக்கும், ஸ்கூலுக்கும் செலவிடுங்கள் என்பது தான். கோயில்களில் பணத்தைப் போடவே கூடாது என்று சொல்லவில்லை… குறிப்பாக தஞ்சை கோயிலைப் பற்றி அவதூறாக, அவமரியாதையாக பேசவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது!
இன்று ஜோதிகா எழுப்பிய இந்தக் கேள்வியானது, பல நூறு வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள மனித நேயம் சிந்தனை உள்ள மக்கள் எழுப்பிய கேள்வி தான்…
பள்ளிவாசலுக்கும் இது பொருந்தும்… தேவாலயங்களுக்கும் இது பொருந்தும்.. ஏழைகளுக்கு செய்யும் சேவை தான் இறைவனுக்கு செய்யும் சேவை என்று அனைத்து ஆன்மீக வழிகாட்டுதலும் காலங்காலமாக வலியுறுத்தும் நிலையில் தரக்குறைவான வார்த்தைகளை ஜோதிகா பயன்படுத்தவில்லை!
அப்படியே ஜோதிகா பேசியது தவறாக இருந்தாலும், கருத்துரிமை அடிப்படையில் ஒருவர் கருத்திற்கு எதிர்க் கருத்து வைத்து, கண்ணியமான விமர்சனங்கள் வைக்க வேண்டுமே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வந்து பேசுவது அநாகரீகத்தின் வெளிப்பாடு..
அதேபோல, கோவிலுக்கு கொடுக்குற மாதிரியே அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்கிற மாதிரியே, ஆஸ்பத்திரிக்கும் பணம் கொடுங்களேன் என்று பொதுவாக ஜோதிகா சொல்லி இருக்க வேண்டுமே தவிர, தஞ்சை கோயிலின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருக்கக் கூடாது!!
அந்த வகையில், ஜோதிகாவும் யோசித்து கவனமாக பேசியிருக்கலாம்!!ஆனால் ஒன்று… சாதி, மதம், சமய பேதமில்லாமல் மொத்தப் பேரையும் கொரோனா அள்ளி போட்டுக் கொண்டு போய் வருகிற இந்த நேரத்திலும் வாக்குவாதங்களும், மிக மோசமான வார்த்தை தாக்குதல்களும் வீசப்படுவது வருத்தமாக உள்ளது..
இப்படி யதார்த்தமாக பேசியதற்கெல்லாம் சாதி, மதத்தை கையில் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டால், புத்தரும், வள்ளலாரும் நடமாடிய இந்த புண்ணிய பூமி கலவர பூமியாகத்தான் மாறும்!