கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கத்தில் ஏழை மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல் -விண்மீன் நியூஸ்
ஏழை மக்களுக்கு நிவாரண உதவி
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோருக்கு அரசு, சமூக ஆர்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சிக்கு உள்பட்ட 20ஆவது வார்டு பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உள்பட்ட ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், சைவ வேளாளர் சங்கத் தலைவருமான தெய்வேந்திரன் சார்பில் மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் காய்கனிகள், மளிகைப் பொருள்கள், அரிசி ஆகியவை கொண்ட தொகுப்பை வழங்கினார்.
நிகழ்வில், சைவ வேளாளர் சங்கச் செயலர் சுந்தரம், துணைத் தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல, கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகரில் பொறியாளர் சீனிவாசகன் – அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி குடும்பத்தினர் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு காய்கனிகள், அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். நிகழ்வில், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 23ஆவது வார்டு பகுதி மக்கள் அனைவருக்கும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான சரவணன் தினமும் காய்கனிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட வறுமைக் கோட்டிற்கு உள்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை, எளிய மக்கள் சுமார் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை கோட்டாட்சியர் விஜயா வழங்கினார்.
நிகழ்வில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, தலைமை உதவியாளர் நிஷாந்தினி, வருவாய் உதவியாளர் பாலு, காட்டுநாயக்கர் சமுதாய சங்க மாவட்டச் செயலர் காளிமுத்து, கோவில்பட்டி சங்கத் தலைவர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.