காதலிக்க மறுத்த பெண் சோடாபாட்டிலால் குத்தி கொலை? ஒரு தலை காதலால் கன்னியாகுமரியில் வெறிச்செயல்?
காதலிக்க மறுத்த பெண் சோடா பாட்டிலால் குத்தி கொலை.. ஒரு தலைக்காதலால் வெறிச்செயல்
Tuesday, 07 Jan, 9.21 am
கன்னியாகுமரி மாவட்டத்தையொட்டிய கேரள எல்லை பகுதியான காரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஆஷிகா. இவரை தமிழக எல்லைப் பகுதியைச் சேர்ந்த அனு என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆஷிகாவை தினமும் பின்தொடர்ந்து வந்த அனு, ஒருகட்டத்தில் தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஆஷிகா, இளைஞர் அனுவின் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளறடா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் ஆஷிகா தனியாக இருப்பதை நோட்டமிட்டு அறிந்துக்கொண்ட அனு, அவரது வீட்டிற்குள் புகுந்து, தான் மறைத்து எடுத்து சென்ற சோடா பாட்டிலை உடைத்து ஆஷிகாவின் கழுத்தில் குத்தினார்.
இதில் அதிக ரத்தம் வெளியேறி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து ஆஷிகா உயிரிழந்தார். தொடர்ந்து அனுவும், அதே பாட்டிலால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, ஆஷிகா ரத்தவெள்ளத்தில்இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அனுவை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுவை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.