கல்லூரி வகுப்பறைக்குள் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம மரணம் ?
கல்லூரி வகுப்பறைக்குள் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம மரணம்..!
சென்னை அரசுப் பள்ளி ஆசிரியை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தவர் ஹரி சாந்தி. நேற்று பிற்பகலில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்ற இவர் கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர். தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹரி சாந்தியின் இடது கையின் மணிக்கட்டு அருகே கத்தியால் கிழித்த காயம் இருப்பதாகத் தெரிவிக்கும் போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹரிசாந்தி 5 ஆண்டுகளுக்கு முன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணி புரிந்தவர். பின்னர் அரசுப் பள்ளி வேலை கிடைத்ததால் கல்லூரியில் இருந்து விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஹரிசாந்தி கல்லூரியை விட்டு சென்றாலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்து பழைய நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்று பிற்பகலில் கல்லூரிக்கு வந்த ஹரிசாந்தி பேராசிரியர் நடராஜன் உள்ளிட்ட சிலரை சந்தித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி நேரம் முடிந்த பின்னும் ஹரிசாந்தி புறப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுபவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தெலுங்கு வகுப்பறை உள்ளிட்ட இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.