களம் விரைவு செய்திகள்.
அதிகாரிகளை “அடித்து உதைப்பேன்” என மிரட்டிய சபாநாயகர்.
அரசின் பொது நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி தன்னை அழைக்காவிட்டால், அடித்து உதைப்பேன் என ஆந்திர சபாநாயகர் தம்மினேனி சீதாராம், அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
ஆந்திர அரசின் சார்பில், ஸ்ரீகாகுளம் நகரில், சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா புலேவின் 129ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபற்றி, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான தம்மினேனி சீதாராமுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கிடைத்த அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆந்திர சபாநாயகர், தமக்கு தகவல் அளிக்காத உள்ளூர் அதிகாரிகளை சரமாரியாக வசைபாடினார். இனி, அரசு பொது நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி அழைக்காவிடில், யாராக இருந்தாலும், உதை விழும் என அதிகாரிகளை மிரட்டினார். வழக்கம்போல், அதிகாரிகள் பதிலளிக்க முயன்று வார்த்தைகளின்றி அமைதியாக நின்றனர்.