கோவில்பட்டியில் லேப்டாப் வழங்கவலியுறுத்தி அரசு பள்ளிமாணவிகள் முற்றுகை?
லேப்டாப் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவிகள்
கோவில்பட்டியில் அரசு மகளிர் பள்ளியில் படித்து மாணவிகள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி பெற திரண்டனர். ஆனால், பள்ளியில் மடிக்கணினி தர மறுக்கின்றனர் என கூறி, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் முறையிட்டனர்.
அவர், பள்ளி உதவி தலைமை ஆசிரியை ரூத்ரத்தினகுமாரியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 479 மடிக்கணினிகள் வந்துள்ளது. இதில், நாளை (இன்று) 2018-19-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு மடிக்கணினிகள் வந்தவுடன் உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார். மடிக்கணினிகள் வந்தவுடன் அனைத்து மாணவிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பள்ளி தரப்பில் கூறுகையில், “2017-18, 2018-19-ம் கல்வியாண்டு மொத்தம் 1092 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்க வேண்டும். ஆனால், 479 மடிக்கணினிகள் தான் வரப்பெற்றுள்ளன. எங்களுக்கு மடிக்கணினி வரப்பெற்றவுடன் அனைவருக்கும் வழங்கப்படும்” என்றனர்.