திருவள்ளுவர் சிலை அவமதிப்பு காவிஉடை அணிவிப்பு குறித்து விசி க தலைவர் திருமாவளவன் கருத்து
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு மற்றும் வள்ளுவருக்கு காவி உடை அணிவித்த செயல் குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் திருவள்ளுவருக்கு திருநீர் பட்டை பூசி காவி உடை தரித்து இந்துமத முனிவரை போல காட்ட முயற்சிக்கும் பாஜக செயல் அநாகரிகத்தின் உச்சம். திருவள்ளுவரை பௌத்தர்களும் சமணர்களும் உரிமை கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது;பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்பதை ஏற்காத மதங்கள் தான் சமணமும் பௌத்தமும். அந்த அடிப்படையில் திருவள்ளுவரை சமணமும் பௌத்தமும் உரிமை கூறுவதில் ஒரு பொருள் இருக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை அடிப்படையாய் வைத்து இயற்றப்பட்ட நூல் தான் திருக்குறள். இந்துத்துவம் சமத்துவத்திற்கு நேர் எதிரானது, சமத்துவத்தின் முதல் பகையே இந்துத்துவம் தான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என போதித்த திருக்குறளை எந்தவித அளவுகோலின் அடிப்படையிலும் இந்துத்துவ சக்திகள் உரிமை கோர முடியாது
வள்ளுவர் மீது காவி சாயம் பூச முயற்சிக்கும் இப்போக்கு அவரை அவமதிக்கும், கொச்சைப்படுத்தும் செயல்.இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களை பாஜகவினர் கைவிட வேண்டும்.தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது கேவலமான அநாகரிகமான போக்கு
அய்யன் திருவள்ளுவரை அவமதிக்கும் அளவிற்கு பிற்போக்கான சூழலில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்றால் ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.;இச்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.