திருநெல்வேலி மாவட்டத்தில் பெல்ஜியம் ஊர் வந்தது எப்படி?
.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது.
அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்?
அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி..
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் பெயரை கொண்டுள்ளது அவ்வூர்.இந்த பகுதிக்கு ஏன் பெல்ஜியம் என்ற பெயர் வந்தது என விசாரித்தால், அப்பகுதியினர் சொல்லும் தகவல் நம்மை வியக்க வைக்கிறது…பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டொம்னிக் பியர், இரண்டாம் உலகப் போரினால் ஊனமுற்ற, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வீரர்களின் நல்வாழ்வு பணிக்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டார். உலக நாடுகளில் பலரிடமும் நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து நற்பணி செய்ததற்காக 1958-ம் ஆண்டில் டொம்னிக் பியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா வந்த அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகேயுள்ள இந்த இடத்தில் 54 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அமைதி பூங்காவை உருவாக்கினார்.களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அமைதி பூங்காவில் வேளாண்மை தொழிலை மேம்படுத்தியது மற்றும் கடனுதவி வழங்கும் வகையில் அவர் உருவாக்கிய கூட்டுறவு சங்கம் இன்றளவும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைதி பூங்காவில் வேளாண் துறை தலைவராக மறைந்த இயற்கை விஞ்ஞாணி நம்மாழ்வார் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்பது நம்மை ஆச்சர்யப்படுத்தும் மற்றொருமொரு தகவல். நம்மாழ்வாரால் நடப்பட்ட பல்வேறு நாட்டு மரங்களும், உருவாக்கிய வேளாண் தொழிலும் கைவிடப்பட்டு இன்று புதர் மண்டி கிடக்கிறது.பெரியம்மை போன்ற நோய்களால் கொத்து கொத்தாக பலர் பலியான கால கட்டத்தில், டொம்னிக் பியர் பெல்ஜியம் நாட்டில் இருந்து 5 மருத்துவர் குழுவை வரவழைத்து ஒவ்வொரு கிராமமாக சென்று மருத்துவ சேவை வழங்கியுள்ளார். பின்னர் பிரிடா மோனியர் என்ற இலவச மருத்துவமனையை அமைதி பூங்காவில் கட்டி எழுப்பினார்.இந்த மருத்துவமனைதான் அந்த பகுதிக்கு பெல்ஜியம் என்ற பெயர் வர காரணமானது. அப்பகுதியிலுள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களால் “பெல்ஜியம் மருத்துவமனை” என இன்றளவும் அழைக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனையை தமிழக அரசு கையகப்படுத்தி நடத்தி வருகிறது.தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தி மேலும் சில வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் அப்பகுதியினரின் கோரிக்கை.அதே வேளையில், பெல்ஜியம் நாட்டு அமைதி தூதர் டொம்னிக் பியரால் உருவாக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் அமைதி பூங்காவையும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அமைதி பூங்காவில் சிதலமடைந்து கிடக்கும் டொம்னிக் பியர் வாழ்ந்த குடியிருப்பு ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் பெல்ஜியம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.