பெண் அரசியல்?
சிறந்தப் பெண் ஆளுமைகள் நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக…
*பெண் அரசியல்*
இன்றளவும் அரசியலில் பெண்கள் பங்களிப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. வாக்காளர்களாக இருப்பது மட்டுமே பெண்களின் அரசியல் நிலை நம் நாட்டில்!
இதற்குக் காரணம் அரசியல் அமைப்புகள் இவற்றில் நிலவும் ஆணாதிக்கப் போக்குகள் அரசமைப்பில் நிலவும் ஆணாதிக்க செயல்பாடுகள் என சாடுகிறார் நூலாசிரியர் பாலபாரதி!
அரசியல் என்பது ஆண்களுக்கான தனி அமைப்பு என்பதே பலரது தவறான நினைப்பாக இருக்கிறது!
பெண்கள் செல்ல வேண்டிய அரசியல் பாதையும் பயணமும் வெகு தொலைவில் இருக்கிறது!
33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா எந்த நூற்றாண்டில் சாத்தியமாகும் என்ற கேள்வி நம் பெண்களிடம் இன்று வரை தொடர்கிறது!
விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து இன்று வரை அரசியல் வானில் மின்னும் அனைத்துப் பெண் பிரபலங்களையும் அடையாளம் காட்டி இருக்கிறார் இந்நூலில்!
இடதுசாரி கருத்துக்களைக் கொண்ட பெண்கள் மட்டுமல்லாது மற்ற கருத்துக்களை கொண்ட பெண் தலைவர்களையும்…
அவர்களின் செயல்பாடுகள், சிறப்புகள் குறித்து அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்!
குடியரசுத் தலைவர் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பெண்களுமே ஏதோ ஒரு வகையில் தங்கள் சாதனையை நிரூபித்துள்ளார்கள் என்கிறார்!
நெருக்கடியான சூழ்நிலைகளில் அனாயாசமாக எதிர் கொண்டு போராடிய பெண் ஆளுமைகளைப் பற்றி இன்றைய….
இளைய தலைமுறைகளுக்கு மட்டுமல்ல பொதுச் சமூகத்திற்கும் அடையாயப் படுத்துவது காலத்தின் கட்டாயம்!
மக்கள் பணியை செம்மையாக செய்ததற்காக படுகொலை செய்யப்பட்ட தாக்குதலுக்குள்ளான பெண் ஆளுமைகளைப்…
பற்றிய தகவல்களை வாசிக்கும் போது நேர்மையான வழியில் அரசியலில் இருக்கும் பெண்களை சூழ்ந்திருக்கும் அபாயங்களைச் சுட்டி காட்டி இருப்பது நெஞ்சை சுடுகிறது!
இந்த சூழலில் மக்களின் வாழ்வில் ஒளியேற்றத் துடிக்கும் பெண்கள் போர்க்களங்களையும் வாழ்வையும்…
துச்சமென மதித்து முன்னேறுவார்கள் என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் பாலபாரதி!
மார்க்சிஸ்ட் தாண்டி மாற்று அரசியல் கட்சித் தலைவர்களையும் மம்தா பானர்ஜி, மாயாவதி, மெஹபூபா முஃபதி, வசுந்தரா ராஜே சிந்தியா, சோனியா காந்தி, ஜெயலலிதா…
எனப் பலரின் தலைமைப் பண்புகளை பாரபட்சமின்றி பதிவு செய்திருப்பது நூலின் சிறப்பு!
சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பேசுவதற்குரிய அனுமதியை அந்தக் கட்சியின் கொறடா மூலமே பெற முடியும் என்ற நிலையில்…
கடைசி நிமிடத்தில் கொறடா பெயர் மாற்றி விட்டதால் பேச இயலாத நிலை என ஏமாற்றத்தோடு புலம்பிய பல பெண் உறுப்பினர்கள் இன்றும் உள்ளது அரசியலின் கொடுமை என்கிறார்!
பெண் அரசியலை முன்னெடுக்கும் விதமாக அமைந்துள்ள இக்கட்டுரைத் தொகுப்பு பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அறிவார்ந்த நூலிது!
ஏறத்தாழ 12 கட்டுரைகளில் 25 கட்டுரைகளில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு காலமறிந்த பெண்ணிய விதைகளை விதைத்திருக்கிறார்!
ஒவ்வொரு இல்லங்களிலும் குடும்ப பெண்கள் வாசிக்க வேண்டிய சகதோழிகளுக்கும் பரிசளிக்க வேண்டிய நன்னூல் மறவாதீர்கள்!