சிவசேனாவிற்கு டிமிக்கி கொடுக்கும் பாஜக ?முதல்வர் பதவியும் கிடையாது 50/50 ஒப்பந்தமும் கிடையாது
முதல்வர் பதவியும் கிடையாது.. 50/50 ஒப்பந்தமும் கிடையாது.. சிவசேனாவிற்கு டிமிக்கி கொடுக்கும் பாஜக!
மும்பை: பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் மகாராஷ்டிராவில் அடுத்த 5 வருடத்திற்கு முதல்வராக இருப்பார், சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை பாஜக கொடுக்க வாய்ப்பில்லை என்று மும்பை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா என்னதான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் இடமென்றாலும், பாஜக அங்கு ஆட்சி அமைப்பதில் எப்போதும் சிக்கல்தான். இந்தமுறையும் அதே சிக்கல் பாஜக கட்சியை துரத்துகிறது. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.
எப்படி நடந்தது? மோடி வந்து பிரச்சாரம் செய்தார்.. ஆனாலும் தோல்வி.. விளக்கம் கேட்கும் அமித் ஷா!
சிவசேனா ஆதரவு
இந்த நிலையில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா தற்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. சிவசேனா என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்தே மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றங்கள் நிகழும்.
ஒப்பந்தம் என்ன
நேற்று பேட்டி அளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக உடன் கூட்டணி தொடரும். நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்போம். தேர்தலுக்கு முன் நாங்கள் போட்டு இருந்த 50/50 ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
கட்சி வளர வேண்டும்
எங்கள் கட்சியும் வளர வேண்டும். பாஜக மட்டுமே வளர்ந்து கொண்டு இருக்க கூடாது, என்று தாக்கரே கூறி இருந்தார். அதாவது ஆட்சிக்கு ஆதரவு தருவோம், ஆனால் 5 வருடங்களில் இரண்டரை வருடம் பாஜக முதல்வரும், இரண்டரை வரும் ஆதித்யா தாக்கரே முதல்வராகவும் இருப்பார் என்று சிவசேனா ஒப்பந்தம் செய்துள்ளது.
பாஜக இல்லை
ஆனால் தற்போது பாஜக இதை பின்பற்ற போவதில்லை. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் தொடர்ந்து முதல்வராக இருப்பார். அடுத்த 5 வருடமும் அவர்தான் முதல்வராக இருப்பார். இதில் எந்த மாற்றமும் கிடையாது, என்று பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம்.
ஷாக்கிங்
சிவசேனா தரப்பிற்கு இது அதிர்ச்சி அளித்துள்ளது. முதல்வர் பதவி, முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்றுதான் பாஜக இந்த கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது. தற்போது அதற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.