ஓபிஎஸ்சுக்கு டிடிவி தினகரன் வைத்த செக்✍️ பிரியும் ஓட்டு.. மகிழ்ச்சியில் ‘தங்கதமிழ்ச்செல்வன்✍️ பரபரக்கும் ‘போடி’ தேனி✍️துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஓபிஎஸ்சுக்கு டிடிவி தினகரன் வைத்த செக்.. பிரியும் ஓட்டு.. மகிழ்ச்சியில் ‘தங்கம்..’ பரபரக்கும் ‘போடி’
தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி போடிநாயக்கனூர்.
இதன்காரணமாக இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது. டிடிவி தினகரன் தனி அணியாக பிரியும் வரை அதிமுகவில் இருந்தவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். எனவே ஒரே கட்சியில் இருந்த இருவர் இங்கு நேரடியாக மோதிக் கொள்கிறார்கள்.
துணை முதல்வர் தொகுதி என்பதால் ஒபிஎஸ்சுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்பது வெளியிலிருந்து பார்ப்போர் கருத்தாக இருந்தாலும் தொகுதியில் பயங்கரப் போட்டி நிலவுவதாகவே தெரிகிறது.
இதன் காரணமாகத்தான், ஓ பன்னீர்செல்வம் வேறு தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய சென்று விடும்போது, அவரிடத்தில் இருந்து தேனி எம்பி மற்றும் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தீவிரமாக வாக்கு வேட்டை ஆடி வருகிறார். தேனி லோக்சபா தொகுதி தேர்தலின்போது டிடிவி அணியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனை டெபாசிட் இழக்க வைத்தது போல இப்போதும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் பிரச்சாரம் செய்து வருகிறார்.
போடிநாயக்கனூர் தொகுதியில், விவசாயிகள் அதிகம். ஆனால், விவசாயிகளின் பல கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை கோரிக்கை இன்னும் கிடப்பில் கிடக்கிறது. கோடாங்கிபட்டியில் துவங்கப்பட்ட இலவம்பஞ்சு தொழிற்சாலை செயல்படவில்லை. இதெல்லாம் ஓபிஎஸ்சுக்கு இருக்கும் சவால்.
2019ல் லோக்சபா தொகுதி நடைபெற்றபோது தேனி தொகுக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதிக்குள், சுமார் 94 ஆயிரம் ஓட்டு வாங்கினார் ரவீந்திரநாத். 2016 சட்டசபை தேர்தலை விட இரட்டை இலைக்கு 5000 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது. இதை உணர்ந்து ஓபிஎஸ் தரப்பு வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வகையிலும் முயன்று வருகிறது.
தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே முக்குலத்தோர் சமூகத்தின், இருவேறு பிரிவுகளை சேர்ந்தவர்களாகும். சமூக வாக்குகள் பிரிந்தாலும் தொகுதியில் பரவலாக இருக்கக்கூடிய தெலுங்கு , கன்னடம் பேசும் மக்கள், நாயுடு, செட்டியார் சாதிப் பிரிவினர், பிள்ளைமார் ஓட்டுக்கு ஓபிஎஸ் தரப்பு குறி வைத்தது. இதற்கு அடுத்து பட்டியல் சமுதாயத்தின் வாக்குகள் இங்கு பரவலாக இருக்கிறது.
அமமுக ஓட்டு பிரிப்பு
இந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெலுங்கு மொழி பேசக்கூடிய சமூகத்திலிருந்து வந்தவர் என்பதால் அந்த வாக்குகள் அவரால் பிரிக்கப்பட்டு விடும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் அதிமுக தரப்புக்கு பெரும் செக் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆதரவாக இருந்த பிற மொழி வாக்குகளை தினகரன் பிரிப்பார்.. முக்குலத்தோர் வாக்குகளில் கணிசமான சதவீதம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்கள் வாக்குகள் ஆகியவற்றை வைத்து பன்னீர்செல்வத்தை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
இங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது எனவே இருதரப்பும் கடைசி நேரத்தில் மக்களை “கவனிக்க ” தயாராகி வருகிறார்கள். கடைசி இரண்டு நாளில், பலகார வினியோகம் பலே ஜோராக நடக்கும் என்கிறது போடிநாயக்கனூர் கள நிலவரம்.