மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு?
மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு…
மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் தங்கி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளில் 264 மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் படகுகள் திசைமாறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவா கடல் பகுதியில் இருந்து மேற்குப் பகுதியில் சுமார் 250 நாட்டிகல் மைல் தொலைவில் சிக்கித் தவித்த அவர்களை மீட்பதற்காக கோவாவில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான சமுத்திர ப்ரஹரி, சமர், சாவித்திரிபாய் பூலே, அமல் மற்றும் அபூர்வா உள்ளிட்ட 7 கப்பல்களும், டோர்னியர் ரக விமானமும் மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில் இந்திய சரக்குக் கப்பலான நவ்தேனு பூர்ணா என்ற கப்பல் நடுக்கடலில் தத்தளித்த 86 மீனவர்களை பத்திரமாக மீட்டது. தொடர்ந்து ஜப்பானிய மீன்பிடிக் கப்பலான டொவாடா என்ற கப்பல் மூலம் 34 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மீதமிருந்த மீனவர்கள் கடலோரக் காவல் படை மூலம் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு உணவும் முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், மீட்கப்பட்ட மீனவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.