3.5 கோடி சம்பளம், 3 கோடி கடன்... சசிகுமாரின் `தனி ஒருவன்’ கணக்கு!
சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்ல நேரம் வந்து, செல்வம் கொட்டும் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல, கெட்டநேரமும் எந்த ரூபத்தில் வந்து கதவைத் தட்டும் என்றும் தெரியாது என்பதற்கு, கண் முன் உள்ள உதாரணம், இயக்குநர் – நடிகர் சசிகுமார்.
முதன்முதலாக சசிகுமார் இயக்கி, நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் ஒரு டபுள் ஹீரோ கதை. ஒரு ஹீரோ ஜெய்க்கு சுவாதியுடன் காதலும் உண்டு, காதல் பாட்டும் உண்டு. இன்னொரு ஹீரோவான சசிகுமாருக்குக் காதலியும் இல்லை, பாட்டும் கிடையாது. இந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சின்னத்திரையில் சீரியல்களை இயக்கிக் கொண்டிருந்த சமுத்திரக்கனியை தனது தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்
ரீ-என்ட்ரி கொடுக்க வைத்தார். பிறகு, அவரைத் தன் தயாரிப்பில் ‘நாடோடிகள்’ படத்தை இயக்க வைத்தும் அழகு பார்த்தார். அதற்குப் பிறகு, பாண்டிராஜ் சொன்ன கதையைக் கேட்டு, ‘பசங்க’ படத்தைத் தயாரித்து பல விருதுகளை அள்ளினார். ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் ஆனது.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு சினிமா வாய்ப்பு அதிகமாக இல்லாமல் இருந்த விஜய் சேதுபதிக்கு, ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் வித்தியாசமான கதாபத்திரத்தைக் கொடுத்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு தாய்குலத்தின் மத்தியில் சசிகுமாரின் செல்வாக்கும் உயர்ந்தது.
கோலிவுட்டில் சசிகுமாரின் மார்க்கெட் சரசரவென உயர்ந்தது. நடிப்புலகில் தனியிடத்தைப் பெற்று விட்ட சசிக்குமாரை, ‘சசி, எப்போ வேணா படம் இயக்கிக்கலாம். நடிப்புல கவனம் செலுத்துங்க’ என்று சசிகுமாரின் நலம்விரும்பிகள் எடுத்துச் சொல்லியும், ‘ஈசன்’ படத்தை இயக்கியவர், பின்னர் நண்பர்களின் பேச்சை உணர்ந்து நடிப்பில் தீவிரமாக இருந்தார்.
அடுத்து, வெளி நிறுவனங்களில் பெருத்த சம்பளம் கொடுத்து நடிக்க அழைத்தபோதிலும், அதைத் தவிர்த்து சொந்தமாகவே படத் தயாரிப்பில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளானார். சினிமாவில் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என்று மூன்று துறைகளிலும் கோலோச்சிய சசிகுமாருக்கு சரிவு தொடங்கியது. மூத்த இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘தலைமுறைகள்’ படத்தைத் தயாரித்து, வெளியிட்டு பொருளாதார ரீதியாகத் தோல்வி அடைந்தார். பிறகு, பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தயாரித்து நடிக்க… அந்தப் படமும் வியாபார ரீதியாகப் பெருத்த அடியைக் கொடுத்தது. எப்போது சொந்தமாகத் தயாரித்து, நடிக்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து சசிகுமார் கடன் சூழ வாழ ஆரம்பித்தார்.
பைனான்ஸியர் அன்புச் செழியனிடம் வாங்கிய கடனுக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, ‘கம்பெனி புரொடக்ஷன்’ நிர்வாகியும், சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தற்கொலை சசிகுமாரை ரொம்பவே பாதித்தது.
‘அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமானவர்களை சும்மா விட மாட்டேன்’ என்று சாவு வீட்டில் வசனம் பேசியவர்கள் எல்லாம் கல்லறை காயும் முன்பே காணாமல் போய் விட்டார்கள். ஏற்கெனவே ஒரு பெரிய பைனான்ஸியரிடம் வாங்கிய 30 கோடிக்கும் அதிகமான கடனை அடைத்து விட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டு வரும் முயற்சியில் போராடிக் கொண்டிருக்கிறார், சசிகுமார்.
இப்போது ஒரு படத்துக்கு சசிகுமார் வாங்கும் சம்பளம் 3 1/2 கோடி ரூபாய். தற்போது, 8 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தில் வாங்கும் சம்பளத்தில் 3 கோடியைக் கடனை அடைக்க ஒதுக்கி விட்டு, 50 லட்சத்தைத் தனக்காக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார், சசிகுமார்.
இந்தப் பாணியை 8 படத்திலும் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கிறார், சசி. சசிகுமார் நினைத்திருந்தால், அவரால் சினிமாவில் ரீ-என்ட்ரியான விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைத்து, ‘நம்மவீட்டுப் பிள்ளை’ படத்தின் இயக்குநர் பாண்டிராஜை இயக்க வைத்து, ஒரே படத்தில் 40 கோடி ரூபாய் பிசினஸ் செய்து, ஒரேநாளில் எல்லாக் கடனையும் அடைத்து விட்டு, நிம்மதியாக வலம் வரலாம்.
சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தால் பட்டை தீட்டப்பட்ட கலைஞர்கள் இன்று உச்சாணிக் கொம்பில் இருந்தாலும், அவர்கள் யாரிடமும் எந்தவிதமான உதவியும் கேட்காமல், சுயமாக நின்று ஜெயிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார், சசிகுமார்.
சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்லநேரம் வந்து செல்வம் கொட்டும் என்று தெரியாது. அதுபோல கெட்டநேரமும் எந்த ரூபத்தில் வந்து கதவைத் தட்டும் என்றும் தெரியாது என்பதற்கு, கண்ணுக்கு எதிரில் உள்ள உதாரணம், சசிகுமார். கடன்களிலிருந்து மீண்டு வருவீர்கள் சசி!