மூலீகை செடி என்று தோட்டத்தில் கஞ்சாச் செடி வளர்த்த சித்த வைத்தியர் கைது? ஈரோட்டில் பரபரப்பு
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/07/Screenshot_20240701-223024-780x470.jpg)
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/07/Screenshot_20240701-223024-780x470.jpg)
ஈரோடு: தோட்டத்தில் கஞ்சாச் செடி வளர்த்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலியைத் தொடர்ந்து தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதனை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்குக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன.
கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதை மருந்துகள் தயாரிப்புகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் அவர்கள் சோதனை செய்த நிலையில் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சாச் செடி வளர்ப்பதாக கோபி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது மூலிகைச் செடிகளுடன் கஞ்சாச் செடி பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளரான சித்த வைத்தியர் மாரப்பன், 80, என்பவரைக் கைது செய்தனர்.
உடந்தையாக இருந்ததாக அவருடைய மகன் கருப்புசாமியும், 45, கைது செய்யப்பட்டார். தோட்டத்தில் இருந்த 11 கஞ்சாச் செடிகள் அழிக்கப்பட்டன.