காற்றாலையை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
காற்றாலையை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வேண்டும், சுற்றுப்புறச்சூழல் திருத்தச் சட்டம் 2020-யை கண்டித்தும், அந்தச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் உமாசங்கர், மாவட்டச் செயலர்கள் முத்து, சிவப்பிரகாசம், கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாரியம்மாள், மேற்கு ஒன்றியத் தலைவர் இம்மானுவேல், சேவா தளத்தைச் சேர்ந்த சக்திவிநாயகம், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசுவா ஞானசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் போராட்டக் குழுவினர் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து போராட்டக் குழுவினர், செய்தியாளர்களிடம் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை கயத்தாறு வட்டம், அகிலாண்டபுரம் கிராம சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.