முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்து மாமனார், மாமியார், சிறுவனை கொலை செய்த குடும்ப குத்து விளக்கு மருமகள்✍️தகாத உறவுக்கு எதிர்ப்பால் ஆத்திரம்✍️சாம்பாரை ஊற்றாமல் ரசத்தை மட்டுமே சாப்பிட்டு தப்பித்த கணவர்✍️முழு விவரம்✍️விண்மீன் நியூஸ்
விருத்தாசலம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததால் சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார், சிறுவன் கொலை செய்யப்பட்டனர். இதில் சாம்பாரை ஊற்றாமல் ரசத்தை சாப்பிட்டதால் கணவர் தப்பித்தார். இதுதொடர்பாக ஒன்றரை ஆண்டுக்கு பின் காதலனுடன் கொடூர மனைவி கைதானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தில் வசித்த தம்பதி சுப்பிரமணியன் (60), கொளஞ்சியம்மாள் (55). இவர்களது மகன் வேல்முருகன் (40) வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா (33). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமாலையின் மகள். வேல்முருகன், கீதா தம்பதிக்கு அகிலேஷ்வர் (12), சரவணகிருஷ்ணன் (6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021 டிசம்பர் 29ம் தேதி கீதா வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதனை சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், சரவணகிருஷ்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு மகன் நித்தீஷ்வரன் (8), மகள் பிரியதர்ஷினி (4) உள்பட 8க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர்.
ஆனால் வேல்முருகன் சாம்பாரை சாப்பிடாமல் ரசம் ஊற்றி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் கொளஞ்சியம்மாள், சுப்ரமணியன், சரவணகிருஷ்ணன், நித்தீஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு 4.1.2022ல் கொளஞ்சியம்மாள் உயிரிழந்தார். மறுநாள் (5ம்தேதி) சுப்ரமணியன், 7ம்தேதி பக்கத்து வீட்டு நித்தீஷ்வரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு சிறுவனும், சிறுமியும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறந்த 3 பேரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தது. அதில், மூன்று பேரும் எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது. உணவில் விஷம் கலந்தது யார் என போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இதில் துப்பு துலங்கியது. சந்தேகத்தின் அடிப்படையில் கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்டு சாம்பாரில் விஷம் கலந்து உள்ளார். ஆனால், கணவர் சாம்பாரை சாப்பிடவில்லை. சாம்பாரை சாப்பிட்ட மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு சிறுவன் பலியானது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,‘ வேல்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது மனைவி கீதாவுக்கும், விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(43) என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவருடைய மாமியார் கொளஞ்சியம்மாள் மருமகளை கண்டித்துள்ளார். மேலும் மகன் வேல்முருகனிடமும் கூறியுள்ளார். அவரும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, தங்களுடைய உறவுக்கு இடையூறாக உள்ள கணவனை கொல்ல முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்து உள்ளார்.
அதை சாதத்துடன் கலந்து சாப்பிட்ட கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், நித்தீஸ்வரன் ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். கீதாவுக்கு எலி பேஸ்ட் வாங்கி கொடுத்தது அவரது காதலன் ஹரிஹரன். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கீதா, ஹரிகரன் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.