தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ,செங்கோட்டை: அதிமுக நகராட்சித் தலைவருக்கு எதிர்ப்பு! – தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் – நடந்தது என்ன?
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றக் கூட்டம், தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, செங்கோட்டை நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டுதல், புதிதாக ஜெனரேட்டர் வாங்குவது, சிறப்புச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்மானங்கள் குறித்த விவாதம் நடைபெறும் என கவுன்சிலர்கள் காத்திருந்தனர். சுயேச்சையாக வெற்றிபெற்று, அ.தி.மு.க-வில் சேர்ந்தவரான நகராட்சித் தலைவர் ராமலட்சுமி தங்களை மதிப்பதில்லை என தி.மு.க கவுன்சிலர்கள் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்து வந்தனர். அத்துடன் தங்கள் வார்டுகளில் எந்தப் பணியும் செய்யவிடாமல் புறக்கணிப்பதாகவும் வருத்தத்தில் இருந்தனர்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் ராமலட்சுமி, சில தினங்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதனை சந்தித்து சால்வை அணிவித்தார். அதனால் அவர் தி.மு.க-வில் சேர்ந்துவிட்டதாகச் சர்ச்சை எழுந்தது. ஆனால், ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில், மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி விளக்கம் அளித்தார்.
இதனிடையே, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி உள்ளிட்டோரும் நகராட்சித் தலைவரின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தனர். செங்கோட்டை நகராட்சித் தலைவர் பொறுப்பு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தங்கள் தரப்பில் பெண் கவுன்சிலர் யாரும் இல்லாததால் சுயேச்சையான ராமலட்சுமியை நிற்கவைத்து வெற்றிபெற வைத்தனர். அதனால் அவர் தி.மு.க மாவட்டச் செயலாளரை சந்தித்ததை அ.தி.மு.க-வினரும் ரசிக்கவில்லை.
இந்த நிலையில், தங்களிடம் தீர்மானங்கள் குறித்து எந்தக் கருத்தையும் கேட்காமல் அவையில் நிறைவேறி விட்டதாக தன்னிச்சையாக நகர்மன்றத் தலைவர் அறிவித்ததால் தி.மு.க கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர். அதனால் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். அதைத் தொடர்ந்து தலைவர் ராமலட்சுமி வெளியேறி காரில் ஏறச் சென்றார். அப்போது 12-வது வார்டு உறுப்பினரான இசக்கித்துரை பாண்டியன் என்பவர் நகர்மன்றத் தலைவரின் கார் முன்பாகப் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தலைமீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீஸாரும் அங்கிருந்தவர்களும் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். தனது வார்டில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நகராட்சி தலைவர் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அவரது செயலால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயற்சி செய்த கவுன்சிலர் இசக்கித்துரை பாண்டியனை நகராட்சி கமிஷனர் அழைத்துப் பேசினார். பின்னர் கவுன்சிலரை அழைத்துக் கொண்டு அவரது வார்டு பகுதிகளையும் சுற்றிப்பார்த்ததுடன், தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதியளித்ததால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.