நடுத்தெருவில் கட்டிப்பிடித்து கொண்ட “பாஜக – திமுக” வேட்பாளர்கள்✍️ காஞ்சிபுரத்து அதிசயம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
நடுத்தெருவில் கட்டிப்பிடித்து கொண்ட “பாஜக – திமுக” வேட்பாளர்கள்✍️ காஞ்சிபுரத்து அதிசயம்✍️✍️
காஞ்சிபுரம்: நடுத்தெருவில் திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் கட்டிப்பிடித்து கொண்டதை பார்த்து பொதுமக்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள்.. அரசியல் நாகரீகம் இன்னமும் நம்மிடம் தழைத்தோங்குகிறது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழகமெங்கும் திமுக கூட்டணி பிரச்சாரங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வாக்கு சேகரிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.. காஞ்சிபுரத்தை பொறுத்தவரை இபபோதைக்கு திமுகவின் கோட்டையாகவே உள்ளது..
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற அபார வெற்றியானது, இந்த முறையும் மாஸ் வெற்றியை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.. அதிலும் இந்த முறை பலம் வாய்ந்த வேட்பாளர்களையே தேடிப் பிடித்து திமுக இங்கு நிறுத்தி உள்ளது.. மாநகராட்சி அந்தஸ்தை காஞ்சிபுரம் சமீபத்தில் பெற்றுள்ளதால் மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெரும்பான்மை பெறும் கட்சியை சேர்ந்தவர்கள் முதல் மேயர் ஆகும் வாய்ப்பை பெறுவார்கள்.. அந்த வகையில் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது.
அதுவும் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீட்டு பெண்களை தேர்தலில் நிற்க வைத்து, உந்துதலாக இருந்து வருகிறார்கள்.. இந்நிலையில், ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் 5வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியா சுகுமார் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்… ஒவ்வொரு தெருவாக சென்ற இலக்கியா, அங்குள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களை கவரும்படியான பணிகளை செய்து தந்து வாக்கு கேட்டு வந்தார்.
அப்போது 5வது வார்டுக்குட்பட்ட ராயன்குட்டை பள்ளதெரு பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.. ஒரு வீட்டிற்குள் நுழைந்து வாக்கு கேட்க முயலும்போது, ஏற்கனவே வாக்கு சேகரிக்க சென்ற பாஜக வேட்பாளர் தமிழ்செல்வி, அந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார்.. இவரும் அதே வார்டில் போட்டியிடுபவர்தான்.. ஒரே வீட்டு வாசற்படியில் எதிரெதிரே திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் சந்தித்து கொண்டனர்.
இருவருமே நட்புடன் சிரித்துக் கொண்டு, தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பரஸ்பரம் வழங்கி கொண்டனர்.. பிறகு, இருவரும் அங்கேயே கட்டிப்பிடித்து கொண்டனர்.. இவர் அவருக்கு வாழ்த்து சொன்னார்.. அவர் இவருக்கு வாழ்த்து சொன்னார்.. இதை பார்த்ததும் இரு வேட்பாளர்களுடன் வந்திருந்தவர்களும் பொதுமக்களும் நெகிழ்ந்து போனார்கள். நடுத்தெருவில் திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டது, அரசியல் நாகரீகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்கப்பட்டு வருகிறது..!