140 கோடி இந்தியர்களின் நலனுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்” – பிரதமர் மோடி ட்வீட்
திருப்பதி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்றிரவு ஹைதராபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அங்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, எம்பிக்கள் மிதுன் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்தார். அங்கு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உட்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கோயிலுக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கே சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்கி பண்டிதர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.