ரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது? அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும் ?
ரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது? ஏன் இந்த வழக்கு? அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும்!
டெல்லி: ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தம் என்றால் என்ன? இது ஏன் சர்ச்சையானது? இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கலாம்!
எல்லோரும் எதிர்பார்த்த ரபேல் வழக்கில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் நாளை வழங்கப்படும் தீர்ப்பு என்பது ரபேல் வழக்கில் ஊழல் நடந்ததா என்று கூறாது.. மாறாக ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமா என்று கூறப்படும்.
அதாவது ரபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க வேண்டுமா? அல்லது கூடாதா? என்று நாளை தீர்ப்பு வழங்கப்படும். இதில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வாங்கிவிட்டது. அதற்கு எதிராக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.
யாரெல்லாம் மனுதாக்கல்
ரபேல் வழக்கில் முதலில் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.
ரபேல் என்றால் என்ன
ரபேல் வழக்கை பற்றி தெரிந்துகொள்ளும் முன் ரபேல் விமானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இந்தியாவின் தேர்வு ரபேல் விமானம் கிடையாது. ஆம் இந்தியா ரபேல் மீது தன் கவனத்தை செலுத்தவே இல்லை. ரபேல் விமானம் சீனுக்கு வந்ததே கடைசியில்தான். ரபேல் போலவே நிறைய MMRCA ரக விமானங்கள் உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
மார்டின் எஃப் – 16, போயிங் எஃப்/ஏ 18, யூரோபைட்டர் டைபூன், ரஷ்யா மிக் 35, ஸ்வீடன் சாப் கிரிப்பேன் மற்றும் ரபேல் ஆகிய விமானங்கள் இதற்காக சோதனை செய்யப்பட்டது. கடைசியில் விலை மற்றும் தேவையை வைத்து ரபேல் தேர்வு செய்யப்பட்டது.
முடிவு எடுக்கப்பட்டது
முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்கவே தேர்வு செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதை வாங்க நினைத்தது பாஜக அல்ல. காங்கிரஸ் அரசுதான் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் இதற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
விமானம் எப்படி
ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை எளிதாக தூரத்தில் இருந்து செய்ய முடியும். அமெரிக்காவின் எப் 14ஐ விட இது சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.
பிரான்ஸ் எப்படி
ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது.