டிரான்ஸ்பார்மரில் ஏறி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் போராட்டம்✍️விளாத்திகுளம் அருகே எதிர்ப்பு போராட்டம்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
டிரான்ஸ்பார்மரில் ஏறி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் போராட்டம்*
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, துணை மின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது டிரான்ஸ்பார்மரில் ஏறி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னமநாயக்கன்பட்டியில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாகலாபுரம் துணை மின் நிலையத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சின்னமநாயக்கன்பட்டி வழியாக மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்னமநாயக்கன்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு வெளிப்புறம் வழியாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டம்
இந்த நிலையில் சின்னமநாயக்கன்பட்டி வழியாக நேற்று மீண்டும் மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் நாகலாபுரம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது நாகலாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி திடீரென்று துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
பொதுமக்கள் விரட்டியடிப்பு
இதுகுறித்து நாகலாபுரம் போலீசாருக்கும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, டிரான்ஸ்பார்மரில் ஏறி இருந்த முனியசாமியை மீட்க முயன்றனர். அப்போது அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்தார்.
இதற்கிடையே டிரான்ஸ்பார்மரில் இருந்து முனியசாமியை தள்ளி விட்டதாக கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
பஞ்சாயத்து தலைவி காயம்
இதில் காயமடைந்த முனியசாமியின் மனைவியும், நாகலாபுரம் பஞ்சாயத்து தலைவருமான உலகம்மாள், நாகலாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையே அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.