சிவகாசியில் மகனிடம் சண்டை.. சிறுவனை கண்டித்த தந்தை! -ஆத்திரத்தில் அவர் மகனை கிணற்றில் மூழ்கடித்து கொன்ற சிறுவன்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மகனிடம் சண்டை.. சிறுவனை கண்டித்த தந்தை! -ஆத்திரத்தில் அவர் மகனை மூழ்கடித்து கொன்ற சிறுவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் சேசு. இவரின் 9 வயது மகன் விஜய்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26-ம் தேதி பக்கத்து தெருவில் விளையாடச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதையடுத்து, தன் மகனைக் காணவில்லை என, சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சேசு. சிறுவன் விஜய்யை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சித்துராஜபுரத்திற்கும் விஸ்வநத்தத்திற்கும் இடையில் உள்ள கிணற்றில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில், சிறுவன் காணமல் போனதாக கூறப்பட்ட நாளில் விஜயுடன் ஒரு சிறுவன் திண்பண்டம் சாப்பிட்டுக் கொண்டே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அச்சிறுவன், சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், ”விஜய்யும் நானும் சண்டை போட்டோம். அதுல அவனை நான் அடிச்சுட்டேன்.
நான் அடிச்சதை அவங்க அப்பாட்ட சொல்லிட்டான். அதுக்காக அவன் அப்பா சேசு, என்னை சத்தம்போட்டு அடிச்சார். கோவத்துல விஜய்க்கு நீச்சல் சொல்லித் தர்றேன்னு சொல்லி கிணத்துக்குக் கூட்டிட்டுப் போயி தள்ளி விட்டேன்” எனச் சொல்லியிருக்கிறான் அச்சிறுவன். இதையடுத்து அச்சிறுவனை கைது செய்த போலீஸார், சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.