கல்வி காவிமயமாக்கப்படுவதில் என்ன தவறு: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி✍️ முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கல்வி காவிமயமாக்கப்படுவதில் என்ன தவறு: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி
காலனிய மனநிலையை மக்கள் கைவிட வேண்டும் என்றும் சொந்த அடையாளத்தை நினைத்து பெருமை கொள்ள கற்று கொள்ள வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “பல நூற்றாண்டு காலனிய ஆட்சி, நம்மை நாமே தாழ்த்தப்பட்ட இனமாக பார்க்க கற்றுக் கொடுத்தது.
சொந்த கலாசாரத்தை, பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்த கற்றுக்கொடுக்கப்பட்டோம். இது ஒரு தேசமாக நமது வளர்ச்சியைக் குறைத்தது. அந்நிய மொழியை நமது கல்வி ஊடகமாக திணிப்பது, கல்வியை சமூகத்தின் ஒரு சிறிய பிரிவினருக்கு மட்டுப்படுத்தியது, பரந்த மக்களின் கல்வி உரிமையை பறித்தது.
நமது பாரம்பரியம், கலாசாரம், முன்னோர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டும். நமது காலனித்துவ மனப்பான்மையை கைவிட்டு, நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
முடிந்தவரை இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவின் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதம் கற்க வேண்டும். நாம் பயன்படுத்தக் கூடிய கருவிகள் பற்றிய அறிவிப்புகளும் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் வெளியிடப்படும் நாளை எதிர்நோக்குகிறேன்.
உங்கள் தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, அதேசமயம் வெளிநாட்டு மொழி பற்றிய உங்கள் அறிவு உங்கள் கண்ணாடி போன்றது. கல்வி முறையில் இந்தியமயமாக்கல் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையப்புள்ளியாகும். இது தாய்மொழிகளை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்கள் சொந்த மொழி குறித்து பெருமை கொள்வதால் ஆங்கிலம் தெரிந்தாலும் தாய்மொழியில் பேசுகிறார்கள்.
இதையும் படிக்க |பஞ்சாபில் இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
கல்வியை காவிமயமாக்குகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். காவியில் என்ன தவறு இருக்கிறது? சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதேவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்கள். இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளாக இவை உள்ளன.
பொதுவான வேர்களைக் கொண்ட அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம் ஆப்கானிஸ்தானில் இருந்து கங்கை சமவெளி வரை பரவியிருந்தது. எந்த நாட்டையும் முதலில் தாக்கக்கூடாது என்ற நமது கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. வன்முறையை விட அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த மாவீரன் அசோகனின் நாடு இது” என்றார்.
சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள் ஆன நிலையில், மெக்காலே கல்வி முறையை நிராகரிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.