சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை புதுச்சேரி நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.
புதுச்சேரி சண்முகாபுரம் தெற்கு பாரதிபுரம் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பு மகன் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார் (27). இவர் அப்பகுதியில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை டியூஷன் நடத்தி வந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டியூஷன் படிக்க வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் தந்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இது குறித்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
அதன்படி, போக்ஸோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.