தலையை வெட்டி எடுத்து கொண்டு சென்ற, பிரபல ரவுடியை என்கவுன்டர் செய்த காவல்துறை பரபரப்பில் கடலூர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பிரபல ரவுடியை என்கவுன்டர் செய்த காவல்துறை பரபரப்பில் கடலூர்
கடலூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாதிரிப்புலியூர். இப்பகுதியிலுள்ள சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் வீரா என்கிற வீராங்கையன் (30 வயது). இவருக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீரா உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்திவருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (16/02/2021) இரவு, 09.30 மணியளவில் பழக்கடையில் வியாபாரத்தை முடித்து, கடையைப் பூட்டிவிட்டு தனது டூவீலரில், வீரா வீட்டுக்குப் புறப்பட்டார். அவரது வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீராவைச் சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியது. இதில் வீரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
அதன் பிறகும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் வீராவின் தலையைத் தனியாகத் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளது. பின்னர், அவரது உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு, அந்த கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக வீராவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து வீராவின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்
தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், கடலூர் மாவட்ட டி.எஸ்.பி. சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீராவின் தலையில்லாத உடலை பார்வையிட்டதோடு, அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பமிட்ட கூப்பர் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட ரவுடி வீராவின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். தொழில் போட்டி காரணமாகப் பழிக்குப் பழி வாங்கினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீராவின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் பண்ருட்டி, குடிமியான்குப்பம் பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் கொலையில் சம்மந்தப்பட்டவர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். அதில் கிருஷ்ணன் என்பவர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் அவரை என்கவுன்டர் செய்துள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து பண்ருட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபல ரவுடி வீரா உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் அவர் கொலையில் சம்மந்தப்பட்டுள்ள கிருஷ்ணன் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீராவின் தலையை கொலையாளிகள் எடுத்துச் சென்றது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.