அதிகமாக நச்சுதன்மை வாய்ந்த செவ்வரளி செடி✍️நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகமாக வளர்க்கப்படுவது ஏன்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகமாக வளர்க்கப்படுவது ஏன்?
செவ்வரளிச்_செடி, அரளிக் குடும்பத்தைச் சார்ந்தது. மிகவும் நச்சுத்தன்மை கொண்ட தாவர வகை. அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரங்கள் சிலவற்றை நாம் எப்போதுமே ஒதுக்கித்தான் வந்திருக்கிறோம். ஆனால், செவ்வரளி என்ற நச்சுத்தன்மை கொண்ட செடியை நாம் அப்படி ஒதுக்குவதில்லை. காரணம், அவற்றின் பயன்கள்தாம்.
நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.
ஆன்மிகத்தில் நன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், செடியின் விஷத்தன்மை காரணமாக யாரும் வீடுகளில் வளர்க்க அதிகமாக விரும்புவதில்லை. செவ்வரளியின் இலைகள், தண்டுகள் எனப் பல பாகங்கள் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், மலர்கள் மருத்துவக் குணம் கொண்டவை. விஷத்தன்மை கொண்ட செடிகளை ஏன் நெடுஞ்சாலைகளில் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாகத் தெரிந்திருப்பதில்லை.
நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கு நடுவே பல வண்ணச் செடிகள் வைக்கப்பட்டாலும், அவற்றில் செவ்வரளி பூக்கும் காலங்களில் வண்ணமயமாகக் #கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கும். நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த #வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும்.
இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.
செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. மேலும் வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை. எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின்மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை. மேலும் இவற்றைப் பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும்.
விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.